Wednesday, January 1, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 13

ஆலத்தை உண்டவன் வந்தான்!


ஆலத்தை உண்டே அகிலம் புரந்தனன்
காலனை வென்றான் கருநிற மாரனைக்
கோல விழியின் கொடுந்தழ லால்எரித்தான்
ஞாலம் தழைக்கவும் நாமும் செழிக்கவும்
சாலவும் அன்பொடு சாயி அவதரித்துச்
சீலம் பலப்பல செப்பி யருளினான்
மூலப் பரம்பொருள் முன்னவன் தன்னிரு
காலைப் பணிவோம் கசிந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-13)

ஆலகால விஷத்தை விழுங்கி இந்த உலகத்தைக் காத்தான். எமனை வெற்றி கொண்டான். கருநிறம் கொண்ட மன்மதனைத் தனது அழகிய நெற்றிக் கண்ணின் கொடிய நெருப்பாலே எரித்தான் அந்தச் சிவபெருமான்.

இப்போது அவனே இந்த உலகம் தழைக்கும்படியாகவும், நாமெல்லோரும் செழிப்பு அடையும்படியாகவும் மிகுந்த அன்போடு சாயியாக அவதரித்திருக்கிறான்.

நமக்குப் பல உயரிய ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பரம்பொருள். இதன் ஆதியும் ஆவான். அவனது இரண்டு பாதங்களையும் மனமுருகிப் பணிவோம் வருவீராக.

சிறப்புப் பொருள்:

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வந்தது விஷம். அதன் வெம்மையால் உலகம் அழிந்துபடும் என்ற நிலையில் அதனைத் தானே விழுங்கிய தியாகராஜன் சிவபெருமான்.

அவ்வாறு அன்பர் துன்பத்தையெல்லாம் தானேற்றுக்கொண்டவன் சாயீசன். பக்தி நெறியில் வந்தோர்க்குக் காமனை வெல்லும் ஆற்றல் கொடுத்தவன். அவ்வாறு காமனை வென்று ஞானவழி நின்றோர்க்குக் காலனையும் அணுகவொட்டாது செய்தவன் அவனே என்பது இப்பாடலின் குறிப்பு. 

No comments:

Post a Comment