Wednesday, January 8, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 23

பிரகலாதனைக் காத்தவனே, எமக்குப் பறை தருவாய்!




உச்சி மலைநின் றுருட்டிய போதிலும்
அச்ச மிலாமலே ஐய,நின் நாமத்தை
உச்சரித்த பாலன் ஒருவிர லால்சுட்டி
நச்சிய தூணில் நரசிம்ம மாகவே
அச்ச முறும்வண்ணம் ஆர்த்தே யெழுந்தவா
அச்சுதா சத்திய சாயீசா என்றுனைப்
பிச்சியர் நாம்பாடிப் பெட்போ டணுகினோம்
மெச்சிப் பறைதருக மீண்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-23)

பிரகலாதனை மலையுச்சியிலிருந்து உருட்டிய போதும் அவன் உன் நாமத்தை உச்சரித்தான். அவன் தனது ஒரு விரலாலே (இதிலும் இருக்கிறான் என்று) சுட்டிக் காட்டிய தூணிலிருந்து நரசிம்மமாக, எல்லோரும் அஞ்சும்படி உரக்க கர்ஜித்தபடித் தோன்றியவனே! அச்சுதா, சத்திய சாயீசா என்று பித்துப் பிடித்தாற்போல பாடிக்கொண்டு, மிக விருப்பத்தோடு உன்னை நாங்கள் அணுகுகிறோம்.

எங்களது பக்தியை மெச்சி மீண்டும் எமக்கு நீ பறை தருதல் வேண்டும்!

No comments:

Post a Comment