Wednesday, January 8, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 24

பதினான்கு வயதில் ‘நான் சாயி பாபா’ என்று அறிவித்தவா....!


ஈரைந் துடனீ ரிரண்டாம் அகவையில்
பாரோ ரறிந்திட பாபாவென் நாமமென்றும்
சீரடி தோன்றிய செம்மலும் யானென்றும்
ஊரறியச் சொல்லி ஒளிபெற நின்றனை
ஆரே அறிவார் அரியநின் மேன்மைகள்
நேரினில் நோக்கியும் நீங்கில தேமாயை
யாருளர் நின்னை யலாலெழில் சத்திய
நாரா யணனே நமக்கேலோ ரெம்பாவாய்!     (பாடல்-24)

பதினான்கு வயதாகும் போது உலகோர் அறியும்படி “என் பெயர் சாயி பாபா, முன்னர் ஷீரடியில் சாயியாக அவதரித்தவனும் நானே” என்று அறிவித்து ஒளிபெற நின்றாய்.

சிந்திக்கவும் அரிதான நின் மேன்மையை யாரே அறிவார்!

உன்னை நேரில் நாங்கள் கண்ணாலே பார்த்துவிட்டோம், ஆயினும் எங்கள் மாயை அகலமாட்டேன் என்கிறதே.

சத்திய நாராயணன் என்ற இயற்பெயர் கொண்டவனே, உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதி யார் இருக்கிறார்கள்!

சிறப்புப் பொருள்:

நேரினில் நோக்கியும் நீங்கிலதே மாயை: இமயமலையில் கடுந்தவம் செய்பவருக்கும் வாய்க்காத உன் தரிசனப் பேறு உன் பெருங்கருணையால் எங்களுக்கு வாய்த்துள்ளது. ஆயினும், மாயையின் காரணமாக, உன்னையும் எம்போன்ற மனிதன், மாயாஜாலம் செய்பவன் என்றெல்லாம் கருதி, ஓரொரு சமயம் வாளாவிருந்துவிடுகின்றோம். நீ சொல்லும் நெறிகளைக் கடைப்பிடித்து நினது அருகே நெருங்கும் தகுதியைப் பெறாது தவறிவிடுகிறோம். அந்த மாயையிலிருந்து மீட்பதும் நீயே அன்றோ சாயி!

No comments:

Post a Comment