Thursday, January 9, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 26

மனித வடிவில் வந்த மாதவன்




பனிமணி தூங்கும் பரங்கியும் பீர்க்கும்
நனிபூத் திலங்கிடு மார்கழி நாளில்
கனியிதழ் வாய்ச்சியே கண்விழி யாயோ!
மனிதரும் மாதவரும் மற்றோரும் வந்து
குனிதரும் சேவடிக் கோமகனைப் பாடிப்
புனித மடைந்து பொலிவுற வாராய்
மனித வடிவினில் வந்தவெம் நாதன்
இனிமையை எண்ணி இசைத்தேலோ ரெம்பாவாய்     26

(கோலங்களில் அழகுற வைத்த) பரங்கிப் பூவிலும் பீர்க்கம் பூவிலும் அழகான பனித்துளிகள் வைரம்போல ஒளிரும் இந்த மார்கழி நாள் காலையில், கனிபோன்ற அழகிய வாய்கொண்ட என் தோழியே, நீ விழித்தெழ மாட்டாயோ!

மனிதரும், ரிஷிகளும், மற்றவர்களும் வந்து நமஸ்கரிக்கின்ற சிவந்த பாதங்களை உடைய திரிபுவன சக்ரவர்த்தியைப் போற்றிப் பாடி நாமும் புனித ஒளியைப் பெறலாம் வாராய்!

மனித வடிவிலே வந்த எம் சாயிநாதனின் சுந்தர ரூபத்தை நினைத்துப் பாட வாராய்! 

No comments:

Post a Comment