Saturday, January 11, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 28

அன்பில் சிறைப்படுவோனே!




அறிவிய லார்க்கும் அகப்படு கில்லாய்
பொறியிய லார்க்குப் புலப்படு கில்லாய்
அறிவும் பொறியும் அகமும் பொருளும்
அறிவரியாய் அன்பில் சிறைப்படு வோனே
நெறியினில் நிற்பார் நினைவி லிருப்பாய்
பொறிகளை வென்றவர் புத்தியி லுள்ளாய்
குறிகுணம் இல்லாய்! அரிவையர் வந்தோம்
பறைதரல் வேண்டும் பரிந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-28)

நாம ரூபங்களைக் கடந்த பரம்பொருளான சாயீசா!

நீ விஞ்ஞானிகளின் சோதனைகளுக்குக் கிட்டமாட்டாய்; பொறியியலாரின் உபகரணங்களுக்குப் புலப்பட மாட்டாய்.

உன்னை அறிவாலும், பொறிகளாலும், மனதாலும், செல்வத்தாலும் அறிய முடியாது.

ஆனால், அன்பிலே சிறைப்பட்டுவிடுவாய்!

தமக்கென விதிக்கப்பட்ட நெறிகளில் நின்று ஒழுகுபவரின் நினைவில் நீயே நிற்பாய்.

பொறி, புலன்களை யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களுடைய புத்தியில் நிற்பாய். (நோன்பு நோற்கும்) பெண்களாகிய நாங்கள் வந்திருக்கிறோம், எங்களுக்கு நீ பறை தர வேண்டும்.

No comments:

Post a Comment