Sunday, January 12, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 29

சமத்துவ நாயகன் சாயி!


எம்மத மாயினும் எந்தநா டாயினும் 
எம்மொழி யாயினும் எந்நிற மாயினும்
சம்மத மென்பான் சமத்துவ சாயியே!
தம்முள் பெருகும் தணியாத தாகத்தால்
செம்பொருள் தேடும் சிலர்க்கென வந்தனன்
எம்மவன் எம்மவன் என்றெவரும் கோரிடும்
செம்மலைச் சேரவே சீர்பாவை நோன்பினை
அம்ம!நாம் நோற்றோம் அருளேலோ ரெம்பாவாய்!    (பாடல்-29)

சமத்துவ நாயகனான எம் சாயி, ஒருவர் எந்த மதத்தினர், எந்த நாட்டினர், எந்த மொழி பேசுபவர், எந்த நிறங்கொண்டவராக இருந்தாலும் தனக்கு ஏற்புடையதே என்று கூறுவான்.

தமக்குள்ளே செம்பொருளான பரப்பிரம்மத்தைத் தேடுகிற தணியாத தாகம் கொண்ட சிலருக்கு வழிகாட்ட அவன் வந்துள்ளான்.

அவனை எல்லோருமே “இவன் என்னவன், இவன் என்னவன்” என்று கோருகின்றனர்.

அப்படிப்பட்ட மேலோனை அடைவதற்காக நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம்.

அம்மா! அவன் அருளவேண்டும்!

No comments:

Post a Comment