Friday, April 24, 2020

ஆராதனா பஞ்சகம்


ஆரமுதே அருட்புனலே அன்பர் தாழும்
பேரழகுப் பெட்டகமே பேணிக் காக்கும்
கார்முகிலே கண்மணியே கங்கை போல
வார்கருணை மாதவனே சாயித் தேவே!

நடந்தாலும் நடனம்போல் நடப்பாய் நன்கு
சுடர்ந்தாலும் சுடர்விழியால் சுடர்வாய் நன்கு
இடர்தீர்க்கும் இருகையால் அருள்வாய் நன்கு
அடர்சிகையின் அச்சுதனே அன்பின் தேவே!

கொண்டமரின் குலக்கொழுந்தே குலவை பாடும்
வண்டமரும் வண்ணமலர் சூடும் மார்பா!
எண்டிசையோர் ஏற்றமுற இன்சொல் கூறும்
பண்டிதர்க்கும் பண்டிதனே பர்த்தித் தேவே!

வீசுகிற அருட்பார்வை மின்னல் வெட்டு
கூசுகிற ஒளிநுதலோ நிலவின் தட்டு
பேசுகிற அமுதமொழி பொருநைத் தென்றல்
பூசுரரும் புவிநரரும் போற்றும் தேவே!

உன்னுடலை நீமறைத்துக் கொண்டா லென்ன
உன்னுகிற ஒருகணத்தில் உள்ளத் துள்ளே
புன்னகையும் பொன்னுடலும் கொண்டே வந்து
என்னவெனக் கேட்டிடுவாய் எந்தன் சாயீ!