Thursday, December 26, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 11

அல்லல்கள் இல்லை!


சில்லென்ற சித்திரைச் செந்நதி யாடியே
முல்லைச் சிரிப்பினாய் முன்செல்லு வோம்இனி
தில்லை நடனத்தன் சீரங்கன் சீரடியன்
பல்லுயிர் தோற்றிப் புரந்து கரப்பவன்
மெல்லிய மாயைத் திரையில் மறைபவன்
எல்லாம் இவனே எனநாம் சரண்புக
அல்லல்கள் இல்லை அழுத்திடும் பாரமில்லை
வல்லமை கொண்டே வழுத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-11)

முல்லை பூத்தாற்போலச் சிரிக்கும் எம் தோழியே!

சில்லென்ற நீர் ஓடுகின்ற சித்திராவதியில் நீராடி, நாம் மேல் செல்லலாம் வா.

தில்லையில் ஆடும் சிதம்பரன், ஸ்ரீரங்கநாதன், ஷீரடிவாசன், எண்ணற்ற உயிர்களைப் படைத்துக் காத்து மறைப்பவன், நமது பார்வைக்கு அகப்படாமல் மெலிதான மாயைத் திரையின்பின் இருப்பவன், இவையெல்லாம் அவனே என்று நாம் புரிந்துகொண்டு, அவனிடம் சரண் புகுந்துவிட்டால் பிறகு நமக்குத் துன்பமில்லை.

உலக வாழ்க்கையின் பாரம் அழுத்தாது. அதனால் ஏற்பட்ட தெம்போடு அவனை வாழ்த்திப் பாடலாம் வா!

Wednesday, December 25, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 10

எங்கெல்லாம் தேடுகிறார்!

வான்பனி போர்த்த இமயக் கொடுமுடியில்
தேன்சொரி கங்கைத் தெளிநீர்க் கரையினில்
கானகந் தன்னில் கடுமறை நான்கனுள்
ஊனுடல் தேய உனையெங்கும் தேடுவர்
மானுடர் நாளெல்லாம்; மண்ணகந் தன்னிலே
வானுயர் மாடம் வளரும் பிரசாந்தி
மாநகர் வாழ்ந்திடும் வள்ளலைக் காணாதோர்!
கோனினைப் பாடிக் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-10)

மனிதர்கள் எல்லாரும் தமது உடல் வற்றிப் போகும்படியாக (தவம்செய்து), அடர்த்தியாக பனியால் போர்த்தப்பட்ட இமயமலையின் சிகரங்களிலும், தேன்போல இனிப்பாகவும் தெளிவாகவும் இருக்கும் கங்கை நதியின் கரையோரத்திலும், காடுகளிலும், நான்கு வேதங்களுக்குள்ளும் உன்னைத் தேடுகிறார்கள்.

வானத்தைத் தொடும்படியான உயர்ந்த மாடங்களைக் கொண்ட பிரசாந்தியென்னும் பெருநகரத்தில் வள்ளலான நீ வசிப்பதை அவர்கள் பார்க்கவில்லை போலும்.

அப்பேர்ப்பட்ட எம் அரசனைப் பாடிக் குளிர்வோம் வாருங்கள்!

Monday, December 23, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 9

காலைக்காட்சிகள்!


துள்ளும் சிறுகன்று தோட்டத்தில் தாய்மடியை
வெள்ளைப்பல் லாலே விசைத்தே இழுப்பதுவும்
புள்ளினம் மாமரப் பூங்கிளையில் கண்விழித்து
பள்ளிச் சிறார்போல் பலப்பல பேசுவதும்
தெள்ளத் தெளியாத செக்கர்வான் ஓரத்தில்
பிள்ளைக் கதிரோன் பெருக முயலுவதும்
கிள்ளை மொழியாய் அறியாய் துயில்கின்றாய்
கள்ளீ எழுவாய் கடிதேலோ ரெம்பாவாய்!    (பாடல்-9)

சிறிய கன்றுக்குட்டி ஒன்று தாயின் மடியைத் தனது வெள்ளைப் பல்லால் கடித்து வேகமாக இழுக்கிறது.

 மாமரத்தின் கிளைகளில் அப்போதுதான் விழித்தெழுந்த பறவைகள் பள்ளிக்குழந்தைகள் போலக் கலகலவெனப் பேசிக்கொள்கின்றன.

சிவந்த அடிவானத்தில் சிறிதான சூரியன் தோன்றி ஒளிமிக வளர முயல்கிறது.

கிளியைப் போன்ற மொழியை உடைய என் தோழியே! இவற்றையெல்லாம் அறியாதவள்போல நீ தூங்குகிறாய்.

கள்ளி, விரைந்து எழுந்து வருவாயாக! 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 8

அன்பைப் பெருக்கிப் பாவம் சுருக்குவோன்!


கருநிறம் வானில் கலைந்தொளிக் கீற்று
வருகிற நாழிகை வந்தனன் சாயி
அருண நிறத்தினில் அங்கி யணிந்து
திருமுகம் தன்னில் சிறுநகை சேர்த்து!
பெருகிடும் நெஞ்சினில் பேரன்பின் வெள்ளம்
அருகிடும் புன்மைகள் அண்ணல்முன் அம்மா!
வருவினை நீக்கியே வான்சுக மூட்டும்
ஒருவனைப் போற்றி ஒசிந்தேலோ ரெம்பாவாய்!    
(பாடல்-8)

வானத்தில் இருளின் கருநிறம் கலைந்து, மெல்லிய ஒளிக்கீற்றுத் தோன்றும் நேரத்தில் தரிசனம் கொடுக்க வருகின்றான் சாயி.

அவன் உதிக்கும் சூரியனின் செந்நிறத்திலேயே அங்கி அணிந்திருக்கிறான்.

அவனுடைய முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்கிறது.

அவனுடைய சன்னிதிக்கு வந்தவுடனேயே நமது மனதில் அளவற்ற அன்பின் வெள்ளம் பெருகுகின்றது. தாழ்ந்த குணங்கள் காணாமற் போகின்றன.

பாவம் தரத்தக்க செய்கைகளை நாம் செய்யவொண்ணாது விலக்கி (நம்மைத் திருத்தியமைத்து), தெய்வலோகத்தின் உயர்ந்த சுகத்தைத் தருபவனாம் சாயியைப் புகழ நளினமாக வருவாயாக!

Sunday, December 22, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 7

எவர் பழிச்சொல்லையும் செவியுறோம்!


ஊரார் மறைவாய் உரைப்பன கேட்கிலோம்
ஆரார் பழியும் அணுவும் செவியுறோம்
ஏரார் சிகையினன் எம்மனம் புக்கவன்
தாரார் எழிலுரு நாமமும் எண்ணியெண்ணி
ஆரோம் உணவும் அணுகிடோம் மஞ்சமும்
நீரார் விழியுடனும் நெஞ்ச நெகிழ்வுடனும்
வாராயென் தோழீ! மகதேவன் பர்த்தீசன்
பேரைப் புகழ்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-7)

எம் கண்ணுக்குக் காணாமல் எம்மை ஊரார் அலருரைப்பதைக் கேட்கமாட்டோம்.

எவர் பழித்துப் பேசுவதையும் சிறிதும் செவியில் வாங்க மாட்டோம்.

அழகிய கேசத்தை உடையவன், எமது மனங்களிலே புகுந்துவிட்டவன், மாலையணிந்தவனாகிய சாயியின் அழகிய உருவத்தையும் பெயரையும் மீண்டும் மீண்டும் மனதிலே நினைத்துக் கொண்டே இருப்போம்.

எமக்கு உணவும் வேண்டாம், படுக்கையும் வேண்டாம். தோழீ! நீ (பக்தியினால்) கண்ணீர் ததும்பும் கண்களோடும் நெகிழும் மனத்தோடும் வா!

மகாதேவனான பர்த்தீசனின் பெயரைப் புகழ்ந்து பாடி நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 6

ஈஸ்வரம்பாவின் திருமகனைப் போற்றுவோம்


ஈசு வராம்பா எமதுல குய்திட
தேசுடைப் பிள்ளை யளித்தனள் தோழிகாள்!
நேசன் அவனெமது நெஞ்சில் நிறைந்தனன்
ஊசல் நிகர்மனம் ஓடாது மாற்றியே
பாச மறுத்தெம்முள் பக்தி நிரப்பினன்
காசறு தெய்வக் களிப்பைப் பெருக்கினன்
மாசறு மெண்ணம் செயல்சொல் லிவையெனும்
வாச மலர்கொண்டு வாழ்த்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-6)

தோழியரே! எம்முடைய இந்த உலகம் உய்யும்படி அன்னை ஈசுவராம்பா ஒளிமிகுந்த பிள்ளை ஒருவனைப் பெற்றுத் தந்திருக்கிறாள்.

அன்பனான அவன் எமது நெஞ்சத்தை நிறைத்துவிட்டான். ஊஞ்சலைப் போல அங்குமிங்கும் ஓடுகின்ற மனதின் அலைச்சலை நிறுத்தி, பாசத்தை அறுத்து, அதில் பக்தியை நிரப்பிவிட்டான்.

ஒரு சிறிது குற்றமும் இல்லாத தெய்வீக ஆனந்தத்தைப் பெருக்கிவிட்டான்.

அவனை மாசில்லாத எண்ணம், செயல், சொல் என்கிற மணமிகுந்த மலர்களால் பூசிப்போம் வா!

அருஞ்சொற்பொருள்: காசறு - குற்றமில்லாத

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் மாசற்று ஒன்றாக இருப்பதே யோகம் என்று பகவான் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 5

பர்த்தீசன் நேயமே வேண்டுவோம்!



எந்தையும் தாயும் எமக்கெனத் தேடிடும்
விந்தை யிளைஞரை வேண்டி விரும்பிடோம்!
சிந்தையில் சீர்பர்த்தி செம்மல்தன் நேயமே
முந்தைநாள் தொட்டு முனைந்து வளர்ந்ததால்!
நிந்தனை யார்க்கும் நினையோம், வறியார்க்குக்
குந்துமணி யேனும் கொடுத்து தவிடுவோம்
இந்திர தேவர்கள் ஏத்திடும் சாயீசன்
சுந்தரப் பாதங்கள் சூழேலோ ரெம்பாவாய்!   (பாடல்-5)

விந்தையான இக்காலத்து இளைஞர்களை எமது வாழ்க்கைத் துணையாக எமது பெற்றோர்கள் தேடுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை விரும்பவில்லை.

சிறுவயது முதற்கொண்டே அழகிய பர்த்தியில் வசிக்கும் உயர்ந்தோனான சாயியின் மீதே நாங்கள் விருப்பத்தைத் தீவிரமாக வளர்த்துக்கொண்டுவிட்டோம்.

அவனை நேசிக்கும் நாங்கள் யாரையும் பழிக்க மாட்டோம். சிறிய குந்துமணி அளவாவது எங்களால் இயன்றபடி ஏழைகளுக்கு ஈதல் செய்வோம். இந்திராதி தேவர்கள் புகழ்கின்ற சாயீசனின் அழகிய பாதங்களைச் சென்றடையலாம் வா!

Friday, December 20, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 4

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!


முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:

பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக.

அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.

புட்டபர்த்தியின் சாபம்:

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த பகவானால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.

Thursday, December 19, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 3

பொய் சொல்லாதே பெண்ணே!



இரவில் உறங்கிலேன் ஏழுகிலேன் என்றே
கரவுரை பேசும் கனிமொழி கேளாய்!
அரவில் துயின்றிட்ட அண்ண லவன்பால்
விரக மடைந்தார் விழிதுயில் வாரோ!
மரமரந் தோறும் மணிக்குயில் கூவும்
சுரபதி பர்த்தியில் தோன்றிய தூயோன்
நரபதி நால்சடை கங்கை சுமந்தோன்
பரமனைப் பாடிப் பணிந்தேலோ ரெம்பாவாய்!   (பாடல்-3)

பொருள்:

கனியைப் போல இனியமொழி பேசும் பெண்ணே! “இரவெல்லாம் நான் உறங்கவில்லை, அதனால் இப்போது எழுந்திருக்க முடியவில்லை” என்று பொய் பேசாதே.

ஆதிசேஷனின்மீது உறங்கும் மாலவன்பால் மையல் கொண்ட பெண்ணுக்கு எங்கேனும் தூக்கம் வருமோ! பலவித மரங்களிலும் அழகிய குயில்கள் கூவுகின்ற புட்டபர்த்தியில் தோன்றிய தூயவனும், தேவாதி தேவனும், மானுடர்க்கெல்லாம் தலைவனும், தொங்குகின்ற சடாமுடியில் கங்கையைச் சுமந்தவனுமான சிவனின் சொருபமாகவே அவதரித்த சாயி பரமனைப் பாடிப் பணிவோமாக!

(அருஞ்சொற்பொருள்: நால்சடை - தொங்குகின்ற சடை)

Monday, December 16, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 2

பஞ்சணையை விட்டு எழுந்து வா!



புட்டப்பர்த் தீசா பிரசாந்தி வாசாவென்(று)
இட்ட முடன்பாடி இவ்விடம் வந்தோம்காண்
பட்டுடல் பைங்கிளி பக்தி மிகுதியினால்
சட்டெனப் பஞ்சணை விட்டெழுந் தெம்முடன்
அட்டுக் கலியை அகற்ற அவதரித்த
பட்டணி அங்கியன் பர்த்தி புரீசனின்
மொட்டவிழ் பாதங்கள் தொட்டுத் தொழுதிட
ஒட்டி வருவாய் உகந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-2)

பட்டுப்போன்ற மென்மையான உடல் கொண்ட பசுங்கிளி அனைய எம் தோழியே! நாங்களெல்லாம் “புட்டப்பர்த்தீசா, பிரசாந்தி வாசா” என்று விருப்பத்துடனே பாடியபடி இங்கே வந்திருக்கிறோம்.

நீ பக்தியின் மிகுதியால் உந்தப்பட்டு சட்டென்று பஞ்சணையை விட்டு எழுந்து எம்மோடு வா.

கலியை அழித்து அகற்றுவதற்காக அவதாரம் செய்துள்ள, பட்டினால் ஆன அங்கியை அணிந்த எம் பர்த்திபுரீசனான பாபாவின் விரிந்த மலர் போன்ற பாதங்களைத் தொட்டுக் கும்பிட விரும்பி நீயும் எம்முடன் சேர்ந்து வருவாயாக!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 1

முன்னுரை

மார்கழி மாதம். பக்தியும் பனியும் சூழ்ந்த காலைகள் புலரும் மாதம். இந்த மாதத்தில் எல்லோரும் கோதையின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் உள்ளமுருகப் பாடியபடிக் கண் புலருவர். அப்படியிருக்க ‘அனைத்துக் கடவுளரும் ஒன்றிணைந்ததற்கும் மேம்பட்ட’ (சர்வதேவதாதீத சொரூபி) என் சாயிநாதனைப் பாட பாவைப் பாடல்கள் இல்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. அந்த ஏக்கத்தை என்னையே கருவியாகக் கொண்டு தீர்த்து வைத்தனன் எம்பெருமான் சாயி.

அவனருளாலே அவன் புகழ் பாடி, அவன் திருக்கரங்களில் சேர்ப்பிக்கும் பாக்கியம் டிசம்பர் 7, 2010 அன்று கிடைத்தது. (அதுவும் தனுர் மாதமே). அவன் திருவுள்ளம் கொள்ளும்போது இது வெளிவரட்டும் என்று காத்திருந்தேன். 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் சென்னை குரோம்பேட்டை சமிதி பாவை நோன்பைக் கொண்டாடியபோது திருப்பாவை, திருவெம்பாவையோடு இதனையும் 30 நாட்களும் இசைத்தனர். அதுவும் அவன் செயலே.


இன்று மார்கழி முதல் நாள். இதை இங்கே இட்டு வைத்தால் யாரேனும் ஒரு சாயி அன்பர் கண்ணில் இது என்றேனும் படலாம். எம்பெருமான் சாயியின் திருவருளாலே இதை இசைக்க விருப்பம் வரலாம். அதையும் அவனுக்கு விட்டுவிடுகிறேன். இதனை இங்கே இடுவதற்கான விழைவை ஏற்படுத்தியவனும் அவனே.

பகவானுக்குச் சமர்ப்பித்த இந்த 30 பாவைப்பாடல்களும் இதோ இன்றிலிருந்து தினமும் ஒன்றாக பக்தர் திருக்கரங்களில்! இவற்றை திருப்பாவைப் பாடல்களின் அதே ராகங்களில் பாட முடியும். இவை ஒலிக்கோப்புகளாகவும் ஒருநாள் வெளிவர என் இதயவாசன் சாயீசன் அருவான்.

உறங்குவது சரியா, என் தோழி!

கீழ்வானில் தோன்றும் கிரணக் கதிரவனின்
ஏழு புரவிகளும் இந்நாள் எழுந்தனகாண்!
வாழு முலகெலாம் வள்ளல் பருத்தீசன்
சூழுபுகழ் பாடத் துயில்வதும் ஆகுமோ?
தோழியர் நாங்கள் துதிபாடி வந்தனம்
ஆழுவ தெங்ஙனம் அம்மா வுறக்கத்தில்!
மூழ்குவம் நன்னீர், முடிகுவம் பூங்குழல்
வாழி! வருவாய் விரைந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல் -1)

பொருள்:

கதிர்வீசிக் கிளம்பும் சூரியனின் ஏழு குதிரைகளும் கிழக்கினிலே இன்றைக்கு உதித்து வருகின்றதைக் காண்பாய். வள்ளலாகிய பர்த்தீசனின் சூழ்ந்த புகழினை இந்த உலகெல்லாம் பாடுகின்றது. அப்படியிருக்க நீ துயில்கின்றாயே, இது தகுமோ? உனது தோழியராகிய நாங்கள் அவனது துதியைப் பாடி வருகின்றோம், நீயெப்படி இவ்வாறு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாய்! விரைந்து வா, நாம் போய் நல்ல நீரில் குளித்து தலையை முடிந்து வரலாம் வா, வாழ்க நீ தோழி.

ஓம் ஸ்ரீ சாயிராம்