Showing posts with label தவம். Show all posts
Showing posts with label தவம். Show all posts

Wednesday, December 25, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 10

எங்கெல்லாம் தேடுகிறார்!

வான்பனி போர்த்த இமயக் கொடுமுடியில்
தேன்சொரி கங்கைத் தெளிநீர்க் கரையினில்
கானகந் தன்னில் கடுமறை நான்கனுள்
ஊனுடல் தேய உனையெங்கும் தேடுவர்
மானுடர் நாளெல்லாம்; மண்ணகந் தன்னிலே
வானுயர் மாடம் வளரும் பிரசாந்தி
மாநகர் வாழ்ந்திடும் வள்ளலைக் காணாதோர்!
கோனினைப் பாடிக் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-10)

மனிதர்கள் எல்லாரும் தமது உடல் வற்றிப் போகும்படியாக (தவம்செய்து), அடர்த்தியாக பனியால் போர்த்தப்பட்ட இமயமலையின் சிகரங்களிலும், தேன்போல இனிப்பாகவும் தெளிவாகவும் இருக்கும் கங்கை நதியின் கரையோரத்திலும், காடுகளிலும், நான்கு வேதங்களுக்குள்ளும் உன்னைத் தேடுகிறார்கள்.

வானத்தைத் தொடும்படியான உயர்ந்த மாடங்களைக் கொண்ட பிரசாந்தியென்னும் பெருநகரத்தில் வள்ளலான நீ வசிப்பதை அவர்கள் பார்க்கவில்லை போலும்.

அப்பேர்ப்பட்ட எம் அரசனைப் பாடிக் குளிர்வோம் வாருங்கள்!