Thursday, June 18, 2020

தினம் ஒரு சாயி வெண்பா: விநாயகர் காப்புச் செய்யுள்


பெற்றோர் பெருமை பெரிதிவ் வுலகிலெனச்
சுற்றிவந்து காண்பித்த தூயவனே - அற்புதமாய்
வெண்பாவிற் சாயி விரிபுகழை நான்கூற
கண்பார்க்க வேண்டும் கனிந்து.

இந்த உலகினைவிடப் பெற்றோர் மிகப்பெருமை உடையோர் என்பதை அவர்களைச் சுற்றி வலம்வந்து நிரூபித்த தூயவனான விநாயகனே! பகவான் ஸ்ரீ சத்திய சாயியின் எல்லையற்று விரிந்த புகழைத் தினமும் ஒரு வெண்பா வழியே நான் சாற்றிட நீ கனிவோடு கடைக்கணிக்க வேண்டுமையா!