Showing posts with label தோழி. Show all posts
Showing posts with label தோழி. Show all posts

Thursday, December 19, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 3

பொய் சொல்லாதே பெண்ணே!



இரவில் உறங்கிலேன் ஏழுகிலேன் என்றே
கரவுரை பேசும் கனிமொழி கேளாய்!
அரவில் துயின்றிட்ட அண்ண லவன்பால்
விரக மடைந்தார் விழிதுயில் வாரோ!
மரமரந் தோறும் மணிக்குயில் கூவும்
சுரபதி பர்த்தியில் தோன்றிய தூயோன்
நரபதி நால்சடை கங்கை சுமந்தோன்
பரமனைப் பாடிப் பணிந்தேலோ ரெம்பாவாய்!   (பாடல்-3)

பொருள்:

கனியைப் போல இனியமொழி பேசும் பெண்ணே! “இரவெல்லாம் நான் உறங்கவில்லை, அதனால் இப்போது எழுந்திருக்க முடியவில்லை” என்று பொய் பேசாதே.

ஆதிசேஷனின்மீது உறங்கும் மாலவன்பால் மையல் கொண்ட பெண்ணுக்கு எங்கேனும் தூக்கம் வருமோ! பலவித மரங்களிலும் அழகிய குயில்கள் கூவுகின்ற புட்டபர்த்தியில் தோன்றிய தூயவனும், தேவாதி தேவனும், மானுடர்க்கெல்லாம் தலைவனும், தொங்குகின்ற சடாமுடியில் கங்கையைச் சுமந்தவனுமான சிவனின் சொருபமாகவே அவதரித்த சாயி பரமனைப் பாடிப் பணிவோமாக!

(அருஞ்சொற்பொருள்: நால்சடை - தொங்குகின்ற சடை)