Showing posts with label பழிச்சொல். Show all posts
Showing posts with label பழிச்சொல். Show all posts

Sunday, December 22, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 7

எவர் பழிச்சொல்லையும் செவியுறோம்!


ஊரார் மறைவாய் உரைப்பன கேட்கிலோம்
ஆரார் பழியும் அணுவும் செவியுறோம்
ஏரார் சிகையினன் எம்மனம் புக்கவன்
தாரார் எழிலுரு நாமமும் எண்ணியெண்ணி
ஆரோம் உணவும் அணுகிடோம் மஞ்சமும்
நீரார் விழியுடனும் நெஞ்ச நெகிழ்வுடனும்
வாராயென் தோழீ! மகதேவன் பர்த்தீசன்
பேரைப் புகழ்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-7)

எம் கண்ணுக்குக் காணாமல் எம்மை ஊரார் அலருரைப்பதைக் கேட்கமாட்டோம்.

எவர் பழித்துப் பேசுவதையும் சிறிதும் செவியில் வாங்க மாட்டோம்.

அழகிய கேசத்தை உடையவன், எமது மனங்களிலே புகுந்துவிட்டவன், மாலையணிந்தவனாகிய சாயியின் அழகிய உருவத்தையும் பெயரையும் மீண்டும் மீண்டும் மனதிலே நினைத்துக் கொண்டே இருப்போம்.

எமக்கு உணவும் வேண்டாம், படுக்கையும் வேண்டாம். தோழீ! நீ (பக்தியினால்) கண்ணீர் ததும்பும் கண்களோடும் நெகிழும் மனத்தோடும் வா!

மகாதேவனான பர்த்தீசனின் பெயரைப் புகழ்ந்து பாடி நாம் மகிழ்ச்சி அடையலாம்.