Showing posts with label ஸ்ரீ சத்திய சாயி பாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ சத்திய சாயி பாபா. Show all posts

Saturday, October 13, 2018

அகந்தை அழிந்தது


டாக்டர் கோல்ட்ஸ்டீனையும், லெனார்டோ கட்டர் அவர்களையும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள பதினோரு நாடுகளுக்கு விஜயம் செய்ய சுவாமி அனுமதித்தபோது, எல் சால்வடாரிலுள்ள பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. அது பதினோராவது நாடு என்பதுகூட ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. நாங்கள் அதை ஒரு பொதுக்கூட்டமாக நடத்த விரும்பினோம். பகவானின் ஆசி வேண்டி ஒரு கடிதம் எழுதினோம்.

சில நாட்களுக்குப் பிறகு, இந்தப் பொதுக்கூட்டம் பற்றி அறிந்திராத இரண்டு புதிய பக்தர்கள், சுவாமிக்காகத் தாங்கள் நடனம் ஆடலாமா என்று கேட்டனர். இந்தக் கேள்வியை அடுத்துதான் “அகந்தையின் மரணம்” என்ற நடன நிகழ்ச்சி வடிவெடுத்தது. அகங்காரம், ஆத்மா, மனம், மனத்தின் நண்பன் என்ற நான்கு பாத்திரங்களாக நால்வர் நடனமாடினர். பொதுநிகழ்ச்சிக்கு இரண்டு வாரம் முன்னர்வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தன. பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. முதலில், நடனமாடுபவர்களுக்கிடையே ஒரு பெரிய சண்டை மூண்டது. இயக்குனர் ‘நான் வெளியேறுகிறேன்’ என்றார். “சுவாமியின் முன் நீங்கள் ‘அகந்தையின் மரணம்’ என்னும் நடனத்தை அரங்கேற்ற விரும்பினால், முதலில் உங்களுடைய அகந்தையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும்” என்பதை அவர்களுக்குச் சூசகமாக விளக்க வேண்டியதாயிற்று. அவர்கள் உண்மையை உணர்ந்தனர். அன்றிலிருந்து அவர்கள் மிக அழகாக ஆடினர்.

அடுத்து, கூட்டம் நடக்க இருந்த ‘நேஷனல் தியேட்டர்’ அரங்கத்தில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் வேலை செய்வதில்லை என்பது தெரிய வந்தது. அவற்றைச் சரிசெய்ய ஆகும் செலவில் இந்தியாவுக்கு இரண்டு முறை போய்வந்துவிடலாம். நிறைய மின்விசிறிகளை வைப்பதென்று தீர்மானம் ஆயிற்று. யாரால் முடியுமோ அவர்களெல்லாம் தங்கள் மின்விசிறிகளை நிகழ்ச்சிக்குத் தந்து உதவலாம் என்று அறிவித்தோம்.

நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்னால், சுவாமியின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் வந்தன. பக்தர்களின் உதவியோடு அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. ‘விழுக்கல்வி' (EHV) வகுப்புகள் நடத்தப்படும் ஒரு பள்ளியில் அந்த ஆசிரியர் சுவரொட்டிகளை வைத்தார். அங்கிருந்த விஷமி ஒருவன் சுவாமியின் படத்தைச் சிதைக்கவே, அவருக்கு மிகவும் மனச்சங்கடம் ஆயிற்று. முதலில் அவர் சிதைத்தவரைத் தண்டிக்கும்படி சுவாமியிடம் வேண்டினார். பிறகு “வேண்டாம், அது சரியல்ல” என்று எண்ணினார். ஒருநாள் மதியம் பள்ளி முடிந்தபின் இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர் சுவாமியின் வழிகாட்டுதலை வேண்டினார். திடீரென்று அவரது கை தானாகவே எழுதத் தொடங்கிற்று. அது அவரது வேண்டுதலுக்கு விடையாக அமைந்தது. அவர் எழுதியது இதுதான்:

“நான் உன்னிடம் அழிவதாக நினைக்கும் ஒரு படமாக வருவதில்லை. அணைக்க முடியாத ஒளியாக வருகிறேன், அழிக்க முடியாத சத்தியமாக வருகிறேன். ஒடுக்க முடியாத உன் மனச்சாட்சியின் குரலாக நான் வருகிறேன், ஏனென்றால் நான்தான் பிரபஞ்ச சத்தியத்தின் சாரம். உன் மனதிலிருக்கும் அழுக்கை நீ அகற்று. அப்போது நீ என் குரலைக் கேட்கலாம். உன் கண்ணைக் கட்டியிருக்கும் பட்டையை அகற்றினால் என்னைப் பார்க்க முடியும். நான் உன்னில் இருக்கிறேன், நான் உன் ஆத்மா, உன் சத்தியம், உன் மனச்சாட்சியின் குரல். நான் உனது தொடக்கமும் முடிவும். என்னை நீ அழிக்க முடியாது. உன்னையேதான் நீ அழித்துக் கொள்வாய்.”
 
சுவரொட்டியில் இந்த வாசகம் வைக்கப்பட்டது. மாணவர்கள் எல்லோரும் இதை வாசித்துவிட்டு அமைதியாக நகர்ந்தனர்.

பொதுநிகழ்ச்சி நாளன்று, டாக்டர் கோல்ட்ஸ்டீன் மற்றும் லெனார்டோ கட்டர் இருவரும் விமான நிலையத்தின் கௌரவ மண்டபத்தில், பஜனைப் பாடல்களுடன் வரவேற்கப்பட்டனர். பிறகு ஆறு சாயி மையங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்ட பின்னர், பொதுக்கூட்டத்துக்குச் சென்றனர்.

என்ன கூட்டம்! சரியான நேரத்துக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. அரங்கத்தின் கதவு அடைக்கப்பட்டது, மற்றவர்கள் திரும்பிப் போக வேண்டியதாயிற்று. இருவரும் வழங்கிய உரையமுதம் வந்தோரின் இதயங்களில் இடம் பிடித்தன. பிறகு ‘அகந்தையின் மரணம்’ நாட்டிய நாடகத்துக்காக நடனக்காரர்கள் மேடையில் நுழைந்தனர். அவருக்கென இடப்பட்ட ஆசனத்திலிருந்தும், அங்கிருந்த ஒவ்வொருவரின் இதய ஊஞ்சலில் அமர்ந்தும் சுவாமி அதைப் பார்த்து ரசித்தார்.

உன்னிடம் அகந்தை இருந்து, அதன் காரணமாக “சுவாமி என்னுடையவர்” என்று நினைத்தால், அதில் சுவாமி சிறைப்பட்டு, உனக்கு உதவமுடியாமல் போய்விடுகிறார். “நான் சுவாமியுடையவன்” என்று நினைக்கும்போது, சுவாமி உன்னைப் பராமரித்து, உனக்கு ஆன்மீக முன்னேற்றம் தருகிறார். எல்லாமே உன் பணிவிலும், மனப்பான்மையிலும் உள்ளது. எல்லாவற்றையும் கடவுளாக ஏற்றுக்கொள். கடவுள் எங்கும், எல்லாவற்றிலும் உள்ளார். கடவுளின் சர்வ வியாபகத் தன்மையை நீ ஏற்கும்போது உன் அகந்தை அழிவுறும். அகந்தைதான் சரணாகதியைத் தடுத்து வழியில் நிற்பது.

ஆதாரம்: Sai Spiritual Showers, Vol. 1, Issue 18 Dt. 27-12-2007

Friday, December 20, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 4

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!


முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:

பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக.

அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.

புட்டபர்த்தியின் சாபம்:

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த பகவானால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.