Saturday, October 13, 2018

அகந்தை அழிந்தது


டாக்டர் கோல்ட்ஸ்டீனையும், லெனார்டோ கட்டர் அவர்களையும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள பதினோரு நாடுகளுக்கு விஜயம் செய்ய சுவாமி அனுமதித்தபோது, எல் சால்வடாரிலுள்ள பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. அது பதினோராவது நாடு என்பதுகூட ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. நாங்கள் அதை ஒரு பொதுக்கூட்டமாக நடத்த விரும்பினோம். பகவானின் ஆசி வேண்டி ஒரு கடிதம் எழுதினோம்.

சில நாட்களுக்குப் பிறகு, இந்தப் பொதுக்கூட்டம் பற்றி அறிந்திராத இரண்டு புதிய பக்தர்கள், சுவாமிக்காகத் தாங்கள் நடனம் ஆடலாமா என்று கேட்டனர். இந்தக் கேள்வியை அடுத்துதான் “அகந்தையின் மரணம்” என்ற நடன நிகழ்ச்சி வடிவெடுத்தது. அகங்காரம், ஆத்மா, மனம், மனத்தின் நண்பன் என்ற நான்கு பாத்திரங்களாக நால்வர் நடனமாடினர். பொதுநிகழ்ச்சிக்கு இரண்டு வாரம் முன்னர்வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தன. பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. முதலில், நடனமாடுபவர்களுக்கிடையே ஒரு பெரிய சண்டை மூண்டது. இயக்குனர் ‘நான் வெளியேறுகிறேன்’ என்றார். “சுவாமியின் முன் நீங்கள் ‘அகந்தையின் மரணம்’ என்னும் நடனத்தை அரங்கேற்ற விரும்பினால், முதலில் உங்களுடைய அகந்தையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும்” என்பதை அவர்களுக்குச் சூசகமாக விளக்க வேண்டியதாயிற்று. அவர்கள் உண்மையை உணர்ந்தனர். அன்றிலிருந்து அவர்கள் மிக அழகாக ஆடினர்.

அடுத்து, கூட்டம் நடக்க இருந்த ‘நேஷனல் தியேட்டர்’ அரங்கத்தில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் வேலை செய்வதில்லை என்பது தெரிய வந்தது. அவற்றைச் சரிசெய்ய ஆகும் செலவில் இந்தியாவுக்கு இரண்டு முறை போய்வந்துவிடலாம். நிறைய மின்விசிறிகளை வைப்பதென்று தீர்மானம் ஆயிற்று. யாரால் முடியுமோ அவர்களெல்லாம் தங்கள் மின்விசிறிகளை நிகழ்ச்சிக்குத் தந்து உதவலாம் என்று அறிவித்தோம்.

நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்னால், சுவாமியின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் வந்தன. பக்தர்களின் உதவியோடு அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. ‘விழுக்கல்வி' (EHV) வகுப்புகள் நடத்தப்படும் ஒரு பள்ளியில் அந்த ஆசிரியர் சுவரொட்டிகளை வைத்தார். அங்கிருந்த விஷமி ஒருவன் சுவாமியின் படத்தைச் சிதைக்கவே, அவருக்கு மிகவும் மனச்சங்கடம் ஆயிற்று. முதலில் அவர் சிதைத்தவரைத் தண்டிக்கும்படி சுவாமியிடம் வேண்டினார். பிறகு “வேண்டாம், அது சரியல்ல” என்று எண்ணினார். ஒருநாள் மதியம் பள்ளி முடிந்தபின் இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர் சுவாமியின் வழிகாட்டுதலை வேண்டினார். திடீரென்று அவரது கை தானாகவே எழுதத் தொடங்கிற்று. அது அவரது வேண்டுதலுக்கு விடையாக அமைந்தது. அவர் எழுதியது இதுதான்:

“நான் உன்னிடம் அழிவதாக நினைக்கும் ஒரு படமாக வருவதில்லை. அணைக்க முடியாத ஒளியாக வருகிறேன், அழிக்க முடியாத சத்தியமாக வருகிறேன். ஒடுக்க முடியாத உன் மனச்சாட்சியின் குரலாக நான் வருகிறேன், ஏனென்றால் நான்தான் பிரபஞ்ச சத்தியத்தின் சாரம். உன் மனதிலிருக்கும் அழுக்கை நீ அகற்று. அப்போது நீ என் குரலைக் கேட்கலாம். உன் கண்ணைக் கட்டியிருக்கும் பட்டையை அகற்றினால் என்னைப் பார்க்க முடியும். நான் உன்னில் இருக்கிறேன், நான் உன் ஆத்மா, உன் சத்தியம், உன் மனச்சாட்சியின் குரல். நான் உனது தொடக்கமும் முடிவும். என்னை நீ அழிக்க முடியாது. உன்னையேதான் நீ அழித்துக் கொள்வாய்.”
 
சுவரொட்டியில் இந்த வாசகம் வைக்கப்பட்டது. மாணவர்கள் எல்லோரும் இதை வாசித்துவிட்டு அமைதியாக நகர்ந்தனர்.

பொதுநிகழ்ச்சி நாளன்று, டாக்டர் கோல்ட்ஸ்டீன் மற்றும் லெனார்டோ கட்டர் இருவரும் விமான நிலையத்தின் கௌரவ மண்டபத்தில், பஜனைப் பாடல்களுடன் வரவேற்கப்பட்டனர். பிறகு ஆறு சாயி மையங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்ட பின்னர், பொதுக்கூட்டத்துக்குச் சென்றனர்.

என்ன கூட்டம்! சரியான நேரத்துக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. அரங்கத்தின் கதவு அடைக்கப்பட்டது, மற்றவர்கள் திரும்பிப் போக வேண்டியதாயிற்று. இருவரும் வழங்கிய உரையமுதம் வந்தோரின் இதயங்களில் இடம் பிடித்தன. பிறகு ‘அகந்தையின் மரணம்’ நாட்டிய நாடகத்துக்காக நடனக்காரர்கள் மேடையில் நுழைந்தனர். அவருக்கென இடப்பட்ட ஆசனத்திலிருந்தும், அங்கிருந்த ஒவ்வொருவரின் இதய ஊஞ்சலில் அமர்ந்தும் சுவாமி அதைப் பார்த்து ரசித்தார்.

உன்னிடம் அகந்தை இருந்து, அதன் காரணமாக “சுவாமி என்னுடையவர்” என்று நினைத்தால், அதில் சுவாமி சிறைப்பட்டு, உனக்கு உதவமுடியாமல் போய்விடுகிறார். “நான் சுவாமியுடையவன்” என்று நினைக்கும்போது, சுவாமி உன்னைப் பராமரித்து, உனக்கு ஆன்மீக முன்னேற்றம் தருகிறார். எல்லாமே உன் பணிவிலும், மனப்பான்மையிலும் உள்ளது. எல்லாவற்றையும் கடவுளாக ஏற்றுக்கொள். கடவுள் எங்கும், எல்லாவற்றிலும் உள்ளார். கடவுளின் சர்வ வியாபகத் தன்மையை நீ ஏற்கும்போது உன் அகந்தை அழிவுறும். அகந்தைதான் சரணாகதியைத் தடுத்து வழியில் நிற்பது.

ஆதாரம்: Sai Spiritual Showers, Vol. 1, Issue 18 Dt. 27-12-2007

No comments:

Post a Comment