Tuesday, October 16, 2018

சுவாமி காட்டிய வழி


நான் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவன். இந்த நகரம், மாவட்டங்கள், மக்கள் எல்லாம் நன்கு தெரியும். போதைமருந்து, குற்றம், வன்முறை, நோய்கள், வீட்டற்றவர்கள் என்பவற்றின் வருகை, இங்கே வாழ்கிறவர்களின் நல்வாழ்க்கையை மிரட்டுவதும் தெரியும். தெருவில் நடக்கும்போதும், சப்வேயில் போகும்போதும், கடைகளுக்குப் போகும்போதும், பலரின் துன்பங்களைப் பார்க்கும் கட்டாயம் ஏற்படுகிறது. சிலர் கையில் பேப்பர் கப்புகளை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறார்கள். வேறு சிலருக்கு அதற்குக்கூடத் திராணி இல்லை. அவர்கள் எல்லோருக்கும் ஏதாவது செய்யலாம். ஆனால், அவர்களுக்கு உண்மையிலேயே இருப்பது வறுமையா அல்லது சோம்பேறித்தனமா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை என்னால் தீர்மானிக்க முடியாத காரணத்தால், முடிந்த அளவு நான் அவர்களைப் புறக்கணித்தேன்.

அவர்களைப் பார்க்கச் சந்தோஷமாக இல்லை. சிலர் மிரட்டுகிற தோற்றம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பணம் கொடுப்பதே இல்லையென்பதில் எனக்கு ஒரு குற்றவுணர்வு இருந்தது. ஆனால் நாராயண சேவை செய்கிறேன், குழந்தைகளுக்குச் சேவை செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி என்னையே நான் சமாதானப்படுத்திக் கொள்வேன். பல்வேறு கலாச்சாரப் பொக்கிஷங்களின் சிகரமான இந்த நகரத்தைப்பற்றி நான் எனக்குச் சற்று வருத்தம் இருக்கத்தான் செய்தது.

இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்படி நான் சுவாமியிடம் பிரார்த்தித்தேன்: ஒன்று, தேவைப்பட்டவர்களுக்கு நான் உதவ வேண்டுமென்ற ஆவல்; இரண்டாவது, அவர்களுக்கு நான் போதுமான அளவு உதவவில்லையே என்ற ஆதங்கத்திலிருந்து விடுதலை பெறுவது.

சுவாமி எனக்கு மிக எளிய தீர்வு ஒன்றைக் கொடுத்தார். தினந்தோறும் நான் நான் சில சாண்ட்விச்சுகளைத் தயாரித்து, அவற்றையும் சில பிஸ்கட்டுகளையும் ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக் கொள்வேன். பிறகு எனது அன்றாட வேலைக்குக் கிளம்புவேன். வீட்டற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் பாராமல் செல்வதற்குப் பதிலாக, அவர்களிடம் நின்று, “ஒரு சாண்ட்விச் வேண்டுமா?” என்று கேட்பேன். “கொடுங்கள், நன்றி” என்பதாகத்தான் அவர்களின் பதில் இருக்கும். சில சமயம் புன்னகைப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் நம் கண்களை அவர்களின் கண்கள் சந்திக்கும். அவர்களுக்கு சாண்ட்விச் தேவையோ இல்லையோ, தம்மை மனிதராக மதித்து, சிறிய உதவியாவது செய்யும் அந்தக் கவனிப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சமயம் அவர்கள் நம்மிடம் மிக இனிமையாகவும், மனதைத் தொடும் வகையிலும் நடந்து கொள்வார்கள்.

மிகப்பெரிய மாற்றம் நடந்தது எனக்குள்தான். எனது தேவை முற்றிலும் நிறைவுற்றது. இப்போதெல்லாம் நான் அவர்களைப் புறக்கணிப்பதில்லை, அவர்களுக்கு உதவவில்லையே என்ற குற்றவுணர்வு இல்லை. ‘Sai Care' மூட்டையை எடுத்துக் கொள்ளாமல் நான் வீட்டைவிட்டுக் கிளம்புவதே இல்லை. சுவாமியின் இந்த வழிகாட்டலுக்கு நான் மிகவும் நன்றியுடயவனாக இருக்கிறேன். *ஜனவரி 1990ல் ஒரு நேர்காணலில் “நான் எப்படி உதவலாம்?” என்று கேட்டதற்கு சுவாமி கூறினார், “உனது மனச்சாட்சியின்படி நட. நான் எப்போதும் உனக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறேன்.” அவர் வழிகாட்டினார், நான் அவ்வழியில் சென்றேன்.

அமெரிக்காவின் தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் இதை நான் ஒரு சாயி சேவைப் பணித்திட்டமாக ஏற்கப் பரிந்துரைக்கிறேன். சில சாண்ட்விச்சுகளைத் தயாரித்து, அத்துடன் பிஸ்கட்டுகளை எடுத்துச் செல்வது மிகமிக எளிது. நியூயார்க்கின் இதே பிரச்சனைகள்தாம் பல நகரங்களிலும் உள்ளது. காரில் செல்பவர்களிடம் கூடத் தட்டேந்திப் பிச்சைக்கு அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் கொடுக்க ஒரு சாண்ட்விச் தயாராக இருக்கட்டும். அவர்களின் கண்களைப் பணிவோடும், நம்பிக்கையோடும் பாருங்கள், தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். பலனை அவரிடமே விட்டுவிடுங்கள்.

ஆதாரம்: Mr. Hal Honig, New York, in Sanathana Sarathi, February 1991

No comments:

Post a Comment