Thursday, October 11, 2018

நான் இருக்கிறேன்.....


நண்பர் வீட்டுக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்பி வரும் வழி அது. சான்டா பார்பாராவின் மிஷனைத் தாண்டி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குறுகலான சாலை, கும்மிருட்டு, பலத்த சாரல். இடது பக்கத்தின் செங்குத்தான பாறைகள் சுவர்போல நிற்கின்றன. வலதுபுறத்தில் கிடுகிடு மலைச்சரிவும் பாயும் நீரும். வெகுவேகத்தில் கார் விரைகிறது; சற்றே வேகத்தைக் குறைத்தேன். இன்னும் வேகம்தான். ‘தற்கொலைத் திருப்பம்’ என்றழைக்கப்படும் வளைவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். சாலையில் இருந்த எண்ணெய்க் கசிவை அடித்துச் செல்லப் போதுமானதாக மழை இல்லை என்பதை கவனித்தேன்.

பிரேக்கைத் தொட்டேன், கார் சறுக்கியது. இன்னும் அழுத்தினேன், சக்கரம் சுழல்வது நின்றது, ஆனால் பிரேக்கே இல்லாதது போலக் கார் பறந்தது. என்ன நடக்கிறதென்பதை என்னால் நம்ப முடியவில்லை. தடுப்புச் சுவரைத் தாண்டிவிட்டது, நேரம் நின்றது, கார் பறந்துகொண்டுதான் இருந்தது. “இல்லை, வேண்டாம், பாபா... பாபா!” என்னுள் எல்லாம் அலறியது.

சறுக்கித் தாவிப் பறந்தபோதும் கார் உருளவில்லை. ஒரு பெரிய கிளை குறுக்கே வந்தது. தலை போயிற்று என்று நினைத்தேன். ஆனால் கார் அதன் கீழே போக, கனத்த கிளையும் இலைகளும் காரின் உச்சியில் உரசுவதைக் கேட்க முடிந்தது. அந்த இருள் குகையில் மற்றுமொரு பாய்ச்சலின் போது இன்னொரு மரம் என்னை நோக்கி வருவது தெரிகிறது. டிரைவர் பக்கம் இருந்த கதவுகளை எதுவோ தாக்கியதில் கார் சற்றே இடப்புறம் நகர்ந்து, மரத்துக்கும் பெரிய பாறைக்கும் இடையே சென்று உட்கார்ந்தது. கண்ணாடி உடைவது கேட்டபோதும், அந்தச் சில்லுகள் வெளிப்புறமாக, உட்புறமல்ல, பறந்தன! ஒன்றிரண்டு ஊசித் துணுக்குகள் முகத்தில் மட்டுமே குத்தின. முகத்தில் பாதிப்பில்லை என்பது புரிந்தது.

கார் திடீரென நின்றது, எஞ்சின் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. பெட்ரோல் டேங்க் நிரம்பியிருந்த போதிலும் நல்லவேளையாகத் தீப்பற்றி வெடிக்கவில்லை.

எஞ்சினை நிறுத்தினேன். விளக்குகள் இல்லை. நிசப்தமல்ல, இரவின் ஒலிகள் பெரிதாகக் கேட்டன. கீழே மிஷன்க்ரீக் நீரோடை. தவளை மற்றும் சுவர்க்கோழிகளின் கூக்குரல். மெதுவாகக் கைகளை, கால்களை, உடலை நகர்த்தினேன். முழுவதுமே நடுக்கம். டிரைவர்பக்கம் இருந்த கதவைத் திறக்கமுடிந்தது. காலெடுத்து வெளியில் வைத்தால் எத்தனை அடி கீழே விழுவேன் என்பதைச் சொல்ல முடியவில்லை. அல்லது காரே நிலைபெயர்ந்து உருளுமா? அதுவும் அவ்வப்போது சிறிது நடுங்கியது. உதறும் குரலில் “ஓ பாபா! பாபா! என்னால் தனியாக இதைச் சமாளிக்க முடியாது. நீ என்னை என்ன செய்யப்போகிறாய்!” என்றேன்.   

டாஷ் போர்டு கடிகாரம் நள்ளிரவுக்கு மேல் ஓரிரண்டு நிமிடம் என்றது. எந்தப் பக்கமும் வெளியேற வழியில்லை. கார் சறுக்கி வந்த சரிவு தெரியவில்லை. எந்தச் சாலையை நான் திடீரென்று விட்டகன்றேனோ அது இருக்கும் திசையும் தெரியவில்லை. அச்சுறுத்தும் விதமாகக் கார் இடதுபுறம் சரியத் தொடங்கியது. காருக்குள் என் பொருட்கள் இறைந்திருந்தன. மெல்ல என் செருப்பைத் தொட்டேன். நாகரீகத்தின் எந்தச் சுவட்டையும் என்னால் அங்கே உணரமுடியவில்லை. என் கார் தடுப்புச்சுவரைத் தாண்டிய நேரத்தில், மலைப்பாதையில் வேறு கார் எதுவும் போகவில்லை. விடியும்வரை அங்கேயேதான் என்று நினைத்தேன்.

நேரம் 12:20. மேலேயிருந்து 45 டிகிரி கோணத்தில் பளீரென்ற ஒளி என்மீது பாய்வதை உணர்ந்தேன். கவனமாக வலதுகதவுப் பக்கம் நகர்ந்தேன். ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு, உதவி கேட்டுக் கூவினேன். பெரிய விளக்கொளிக்குப் பின்னே சில ஆண்குரல்கள் கேட்டன. நான் உயிரோடும் அடிபடாமலும் இருக்கிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்றும், தீயணைப்புப் படை பின்னால் வருகிறதென்றும் கூறினர். ஒரு சங்கிலியைப் பிணைத்து முதலில் ஒருவர் வருவதைப் பார்த்தேன். பின்னால் மூவர். ஒரு சங்கிலிப் பெட்டியில் (வின்ச்) என்னை ஏற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்ல அரைமணி பிடித்தது. நான் மீண்டும் சாலையில் நின்றபோது, காயம் இல்லாமல் பிழைத்திருப்பதை நான் உட்பட யாராலுமே நம்ப முடியவில்லை.   

“நான் எங்கிருக்கிறேன், என்னை எங்கே தேடுவதென்று எப்படித் தெரியவந்தது?” என்று என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அதிகாரியிடம் கேட்டேன். “12:11க்கு எனக்குத் தகவல் வந்தது. யாரோ கூப்பிட்டார்கள்” என்றார். தகவல் கொடுத்தவருக்கு நன்றி சொல்ல நான் பெரிது விரும்பினேன். வீட்டுக்குப் போனதும் அவர் தலைமையகத்தைக் கூப்பிட்டுக் கேட்டார். “பெயர் சொல்லாத யாரோ கூப்பிட்டார்களாம்”. “ஆணா? பெண்ணா?” என்று கேட்டேன் நான். “சொல்ல முடியவில்லை.”

“இந்த நிலையில் ஏன் பெயர் சொல்லாமல் கூப்பிட வேண்டும்?” என்று கேட்டேன். “பலர் தலையிட விரும்புவதில்லை” என்றார் போனைக் கீழே வைத்துவிட்டு. அவரை வெளியே அனுப்பக் கதவருகே போகும்போது என்னுள் “நான் தலையிட்டேன்” என்ற சொற்கள் தெளிவாகக் கேட்டன.

பாபா, என் இதயத்திலிருந்து சொல்கிறேன், உனக்கு நன்றி. எந்தக் காரணத்துக்காக நீ என்னைக் காப்பாற்ற நினைத்திருந்தாலும் அதற்கு நான் நூறு சதவீதம் ஒத்துழைப்பேன்.

அதற்குப் பின்னர் பலமுறை அதே விபத்தின் அச்சத்தோடு திடுக்கிட்டு உறக்கத்திலிருந்து எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் “நான் தலையிட்டேன்” என்ற சொல்லை மீண்டும் கேட்டு அமைதியடைகிறேன்.

ஆதாரம்: Muriel J Engle, Santa Barbara, USA in Sanathana Sarathi, 1979.

No comments:

Post a Comment