Showing posts with label தில்லை. Show all posts
Showing posts with label தில்லை. Show all posts

Thursday, December 26, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 11

அல்லல்கள் இல்லை!


சில்லென்ற சித்திரைச் செந்நதி யாடியே
முல்லைச் சிரிப்பினாய் முன்செல்லு வோம்இனி
தில்லை நடனத்தன் சீரங்கன் சீரடியன்
பல்லுயிர் தோற்றிப் புரந்து கரப்பவன்
மெல்லிய மாயைத் திரையில் மறைபவன்
எல்லாம் இவனே எனநாம் சரண்புக
அல்லல்கள் இல்லை அழுத்திடும் பாரமில்லை
வல்லமை கொண்டே வழுத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-11)

முல்லை பூத்தாற்போலச் சிரிக்கும் எம் தோழியே!

சில்லென்ற நீர் ஓடுகின்ற சித்திராவதியில் நீராடி, நாம் மேல் செல்லலாம் வா.

தில்லையில் ஆடும் சிதம்பரன், ஸ்ரீரங்கநாதன், ஷீரடிவாசன், எண்ணற்ற உயிர்களைப் படைத்துக் காத்து மறைப்பவன், நமது பார்வைக்கு அகப்படாமல் மெலிதான மாயைத் திரையின்பின் இருப்பவன், இவையெல்லாம் அவனே என்று நாம் புரிந்துகொண்டு, அவனிடம் சரண் புகுந்துவிட்டால் பிறகு நமக்குத் துன்பமில்லை.

உலக வாழ்க்கையின் பாரம் அழுத்தாது. அதனால் ஏற்பட்ட தெம்போடு அவனை வாழ்த்திப் பாடலாம் வா!