Showing posts with label சாயீசன். Show all posts
Showing posts with label சாயீசன். Show all posts

Sunday, December 22, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 5

பர்த்தீசன் நேயமே வேண்டுவோம்!



எந்தையும் தாயும் எமக்கெனத் தேடிடும்
விந்தை யிளைஞரை வேண்டி விரும்பிடோம்!
சிந்தையில் சீர்பர்த்தி செம்மல்தன் நேயமே
முந்தைநாள் தொட்டு முனைந்து வளர்ந்ததால்!
நிந்தனை யார்க்கும் நினையோம், வறியார்க்குக்
குந்துமணி யேனும் கொடுத்து தவிடுவோம்
இந்திர தேவர்கள் ஏத்திடும் சாயீசன்
சுந்தரப் பாதங்கள் சூழேலோ ரெம்பாவாய்!   (பாடல்-5)

விந்தையான இக்காலத்து இளைஞர்களை எமது வாழ்க்கைத் துணையாக எமது பெற்றோர்கள் தேடுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை விரும்பவில்லை.

சிறுவயது முதற்கொண்டே அழகிய பர்த்தியில் வசிக்கும் உயர்ந்தோனான சாயியின் மீதே நாங்கள் விருப்பத்தைத் தீவிரமாக வளர்த்துக்கொண்டுவிட்டோம்.

அவனை நேசிக்கும் நாங்கள் யாரையும் பழிக்க மாட்டோம். சிறிய குந்துமணி அளவாவது எங்களால் இயன்றபடி ஏழைகளுக்கு ஈதல் செய்வோம். இந்திராதி தேவர்கள் புகழ்கின்ற சாயீசனின் அழகிய பாதங்களைச் சென்றடையலாம் வா!