Monday, December 23, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 9

காலைக்காட்சிகள்!


துள்ளும் சிறுகன்று தோட்டத்தில் தாய்மடியை
வெள்ளைப்பல் லாலே விசைத்தே இழுப்பதுவும்
புள்ளினம் மாமரப் பூங்கிளையில் கண்விழித்து
பள்ளிச் சிறார்போல் பலப்பல பேசுவதும்
தெள்ளத் தெளியாத செக்கர்வான் ஓரத்தில்
பிள்ளைக் கதிரோன் பெருக முயலுவதும்
கிள்ளை மொழியாய் அறியாய் துயில்கின்றாய்
கள்ளீ எழுவாய் கடிதேலோ ரெம்பாவாய்!    (பாடல்-9)

சிறிய கன்றுக்குட்டி ஒன்று தாயின் மடியைத் தனது வெள்ளைப் பல்லால் கடித்து வேகமாக இழுக்கிறது.

 மாமரத்தின் கிளைகளில் அப்போதுதான் விழித்தெழுந்த பறவைகள் பள்ளிக்குழந்தைகள் போலக் கலகலவெனப் பேசிக்கொள்கின்றன.

சிவந்த அடிவானத்தில் சிறிதான சூரியன் தோன்றி ஒளிமிக வளர முயல்கிறது.

கிளியைப் போன்ற மொழியை உடைய என் தோழியே! இவற்றையெல்லாம் அறியாதவள்போல நீ தூங்குகிறாய்.

கள்ளி, விரைந்து எழுந்து வருவாயாக! 

No comments:

Post a Comment