Sunday, December 22, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 6

ஈஸ்வரம்பாவின் திருமகனைப் போற்றுவோம்


ஈசு வராம்பா எமதுல குய்திட
தேசுடைப் பிள்ளை யளித்தனள் தோழிகாள்!
நேசன் அவனெமது நெஞ்சில் நிறைந்தனன்
ஊசல் நிகர்மனம் ஓடாது மாற்றியே
பாச மறுத்தெம்முள் பக்தி நிரப்பினன்
காசறு தெய்வக் களிப்பைப் பெருக்கினன்
மாசறு மெண்ணம் செயல்சொல் லிவையெனும்
வாச மலர்கொண்டு வாழ்த்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-6)

தோழியரே! எம்முடைய இந்த உலகம் உய்யும்படி அன்னை ஈசுவராம்பா ஒளிமிகுந்த பிள்ளை ஒருவனைப் பெற்றுத் தந்திருக்கிறாள்.

அன்பனான அவன் எமது நெஞ்சத்தை நிறைத்துவிட்டான். ஊஞ்சலைப் போல அங்குமிங்கும் ஓடுகின்ற மனதின் அலைச்சலை நிறுத்தி, பாசத்தை அறுத்து, அதில் பக்தியை நிரப்பிவிட்டான்.

ஒரு சிறிது குற்றமும் இல்லாத தெய்வீக ஆனந்தத்தைப் பெருக்கிவிட்டான்.

அவனை மாசில்லாத எண்ணம், செயல், சொல் என்கிற மணமிகுந்த மலர்களால் பூசிப்போம் வா!

அருஞ்சொற்பொருள்: காசறு - குற்றமில்லாத

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் மாசற்று ஒன்றாக இருப்பதே யோகம் என்று பகவான் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.

No comments:

Post a Comment