Showing posts with label பேரன்பின் வெள்ளம். Show all posts
Showing posts with label பேரன்பின் வெள்ளம். Show all posts

Monday, December 23, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 8

அன்பைப் பெருக்கிப் பாவம் சுருக்குவோன்!


கருநிறம் வானில் கலைந்தொளிக் கீற்று
வருகிற நாழிகை வந்தனன் சாயி
அருண நிறத்தினில் அங்கி யணிந்து
திருமுகம் தன்னில் சிறுநகை சேர்த்து!
பெருகிடும் நெஞ்சினில் பேரன்பின் வெள்ளம்
அருகிடும் புன்மைகள் அண்ணல்முன் அம்மா!
வருவினை நீக்கியே வான்சுக மூட்டும்
ஒருவனைப் போற்றி ஒசிந்தேலோ ரெம்பாவாய்!    
(பாடல்-8)

வானத்தில் இருளின் கருநிறம் கலைந்து, மெல்லிய ஒளிக்கீற்றுத் தோன்றும் நேரத்தில் தரிசனம் கொடுக்க வருகின்றான் சாயி.

அவன் உதிக்கும் சூரியனின் செந்நிறத்திலேயே அங்கி அணிந்திருக்கிறான்.

அவனுடைய முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்கிறது.

அவனுடைய சன்னிதிக்கு வந்தவுடனேயே நமது மனதில் அளவற்ற அன்பின் வெள்ளம் பெருகுகின்றது. தாழ்ந்த குணங்கள் காணாமற் போகின்றன.

பாவம் தரத்தக்க செய்கைகளை நாம் செய்யவொண்ணாது விலக்கி (நம்மைத் திருத்தியமைத்து), தெய்வலோகத்தின் உயர்ந்த சுகத்தைத் தருபவனாம் சாயியைப் புகழ நளினமாக வருவாயாக!