Tuesday, May 5, 2020

ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

ஓம் ஸ்ரீ சாயிராம்



அவர் பெற்றார் இவர் பெற்றார்
  அவையெல்லாம் குழந்தைகளே!
இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா
  எனும்பெயரைக் கொண்டபெருந்
தவள்பெற்றாள் தான்பெற்றாள்
  தரணியெலாம் உய்ந்திடவே
சிவம்பெற்றாள் சக்தியினைச்
  சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்!

நோயுற்றார் பிணிதீர்ந்தார்
  நோற்பாரோ தவம்தீர்ந்தார்
போயுற்றார் புட்டபர்த்திப்
  பொன்னகரை, ஈஸ்வரம்மா
தாயுற்ற தவப்புதல்வன்
  தன்னிகரில் லாத்தலைவன்
சாயீசன் சன்னிதியில்
  சன்மமிலா வாழ்வுற்றாரே!

நீலவொளிச் சிறுபந்தாய்
  நிமலமகள் கருப்புகுந்தான்
ஆலமதை அருந்தியவன்
  அவள்மடியில் அமுதருந்த!
சீலமிகும் ஈஸ்வரம்மா
  செய்ததவம் எவர்செய்தார்
பாலகனாய்ப் பரமனையே
  பரிவுடனே வளர்த்தெடுக்க!

நாமகிரி நல்வயிற்றில்
 “நாதனவன் வருவன்”என
ஆமந்த அவதூதர்
  அறிவித்த காரணத்தால்
“நாமமினி ஈஸ்வரம்மா!”
  நவின்றாராம் கொண்டமரும்;
பூமகளின் புகழ்மகனே
  போற்றுகநின் திருநாமம்!

போற்றுகநின் பூம்பாதம்
  போற்றுகநின் பெருங்கருணை
போற்றுகநின் ஞானமொழி
  போற்றுநின் பொற்கரங்கள்
போற்றுகநின் மெய்யருளால்
  பொலிவுற்ற வேதவழி
போற்றுகவே ஈஸ்வரம்மா
  பொற்கருவில் வந்தஇறை!

மதுரபாரதி
06-05-202

3 comments:

  1. Dhanyaho Eswaramaa! Excellent poetry!!

    ReplyDelete
  2. Sairam tenisaiyaga irukkiradu ungak kavidai Sai arul endrum ungallukku irukku

    ReplyDelete
  3. Sairam....mathuram mathuram

    ReplyDelete