Showing posts with label கழுவாய். Show all posts
Showing posts with label கழுவாய். Show all posts

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 21

மாசகற்ற வந்தவன் புகழ் பேசு!


காற்றொலி தண்ணீர் ககனம் புவியெனச்
சாற்றிய யாவையும் மாசு படுத்தினர்
தேற்றரு மானுடர்! தேவதே வாநின்றன்
மாற்றரு மாற்றலால் மாற்றியிவ் வண்டத்தில்
போற்றரு தூய்மை புகுதரச் செய்குவாய்!
நோற்றனம் பாவைக்கு நோன்பினை அய்யனே!
போற்றிநின் பேரருளால் பொய்யா மழைபொழிக!
கூற்றம் குதித்தோனைக் கூறேலோ ரெம்பாவாய்    (பாடல்-21)

காற்று, ஒலி, வானம், பூமி என்று கூறத்தக்க எல்லாவற்றையும் மாசுபடுத்திவிட்டனர், இந்தத் திருந்த மாட்டாத மனிதர்கள்.

தேவதேவனே! உன்னுடைய அழிக்கவொண்ணாத ஆற்றலால் நீதான் இவற்றை மாற்றியமைத்து, உலகில் மிகுந்த தூய்மை மீண்டும் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் பாவை நோன்பினை நோற்கிறோம்.

உன்னுடைய பேரருளாலே உலகில் மழை பொய்க்காமல் காலத்தில் பெய்திட வேண்டும்.

எமனையே அழித்தவன் புகழைக் கூற வாரீர்!

சிறப்புப் பொருள்:

மனிதன் இயற்கையை மதிக்காமல் அதனைத் தவறாக, மிகையாகப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியும் பல்வேறு பேரிடர்களுக்கும் (நிலநடுக்கம், வெள்ளம், புயல், கடற்சீற்றம், வறட்சி போன்றவை) அவன் காரணமாக இருக்கிறான். பாவை நோன்பினை அதற்குக் கழுவாயாக இந்த இளம்பெண்டிர் நோற்பதாகக் கூறுகிறார்கள்.