Showing posts with label கும்மி. Show all posts
Showing posts with label கும்மி. Show all posts

Thursday, January 3, 2019

ஸ்ரீ சத்ய சாயி கும்மிப் பாட்டு


தட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி சத்ய
  சாயி பெயர் சொல்லித் தட்டுங்கடி
பட்டொளி அங்கி அணிந்தவன் பொன்மலர்ப்
  பாதத்தைச் சிந்தையில் கட்டுங்கடி!

வேதத்தின் உச்சியில் வீற்றிருப்பான் ஏழை
  வேடனின் கண்ணையும் ஏற்றிருப்பான்
நாதத்திலும் ஞான போதத்திலும் உள்ள
  நாதனின் பேர்சொல்லிக் கும்மியடி!

பர்த்தியெனும் சிறு பட்டியில் தோன்றியே
  பாரெங்கும் பக்தர் மனங்களிலே
நர்த்தனம் செய்திடும் ஆடலரசனின்
  நாமத்தைச் சொல்லியே கும்மியடி!

கண்ணன்சிவன் கந்தன் கணபதி கோசலை
  கர்ப்பத்தில் தோன்றிய ராமனிவன்
எண்ணரிய தெய்வம் அத்தனையும் இவன்
  என்று புகழ்ந்து கை கொட்டுங்கடி!

தங்கத்தில் கைவளை மின்னிடவும் தலை
  தாங்கிய பூச்சரம் முன்னிடவும்
அங்கம் வியர்த்து மினுங்கிடவும் ஐயன்
  அழகை வியந்து கை கொட்டுங்கடி!

சேவை செய்வோரை நயந்திடுவான் சுரம்
  சேர்த்திசை பாடிடில் காத்திடுவான்
ஓவோ இவனைப்போல் இன்னோர் தெய்வம் இனி
  உண்டோ எனப் பாடிக் கும்மியடி!

சத்தியம் தருமம் பிரேமை என இவன்
  சாந்திக்குப் பாதை அமைத்துத் தந்தான்
முத்தியும் உண்டாம் இப்பாதையில் போயிடின்
  மோகனனைப் பாடிக் கும்மியடி!

கருமம் பக்தி ஞானம் யாவுமே
  கற்றுக்கொடுத்தான் எளியருக்கும்;
கருமுகில் சிகையெனக் கொண்ட சதாசிவன்
  கருணையை எண்ணியே கும்மியடி!

அனைத்து லகிலும் அனைத்து யிர்களும்
  ஆனந்த மாகவே வாழ்கவென
நினைக்கப் பயிற்சி கொடுத்தவனின் பெரும்
  நேயத்தைப் போற்றியே கும்மியடி!

ஈசுவ ராம்பாவின் வயிறுதித்த சா
  யீசனின் சுந்தர ரூபத்தினை
மாசிலா மனதொடு எண்ணியெண்ணி
  மகிழ்ந்து சுழன்று நீ கும்மியடி!

உலகம் அன்பில் தழைத்திடவும் மக்கள்
  ஒற்றுமையில் உயர் வடைந்திடவும்
அலகிலாத் தெய்வம் அருளிடவும் வேண்டி
  ஆடியே கும்மி அடியுங்கடி!

சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
  சாயிராம் சாயிராம் சாயிராமா
சாயிராம் சாயிராம் சாயிராமா எனச்
  சாயிநாமம் பாடிக் கும்மியடி!