Showing posts with label பொன்னே. Show all posts
Showing posts with label பொன்னே. Show all posts

Friday, January 10, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 27

எம் நிலை பாராய்!


உன்னை நினைந்தோம் உருகினோம் அன்பினில்
தன்னை மறந்தோம் தவித்தோம் குழறினோம்
அன்னம் படுக்கை அணிகள் மறந்தனம்
அன்னையும் தந்தையும் அல்லல் மிகவெய்த
எந்நேர மாயினும் நின்திரு நாமமே
உன்னிக் கசிந்தோம் உடலது வாடினோம்
பொன்னே மரகதமே புட்டப்பர்த் தீசனே
இன்னமும் தாமத மேனேலோ ரெம்பாவாய்!    (பாடல்-27)

பொன்னே, மரகதமே, புட்டப்பர்த்தீசனே! உன்னை நினைத்து நாங்களெல்லாம் அன்பில் உருகுகிறோம். எங்களை மறந்து தவித்து வாய் குழறுகிறோம்.

உணவும், படுக்கையும், ஆடையணிமணிகளும் மறந்தே போய்விட்டோம்; எங்கள் தாய் தந்தையர் எங்களுடைய நிலைமையைப் பார்த்து வருந்துமளவுக்கு நாங்கள் எந்த நேரமும் உன்னுடைய திருப்பெயரையே நினைந்து நினைந்து உருகுகிறோம்.

எங்கள் உடல் வாடி மெலிந்துவிட்டது. இன்னமும் எம்மைத் தன்னோடு கலவாமல் ஏன் தாமதம் செய்கிறாய்!