Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 22

காலத்துக்கேற்ற கல்வி தந்தனை!

ஸ்ரீ சத்திய சாயி உயர்கல்வி நிறுவனம், புட்டபர்த்தி

இதமல பேசி இதமல செய்து
பதமல தேர்ந்து பழகுதல் எங்கள்
சுதந்திரம் என்றே யுரைக்கும் இளையோர்
விதமுறு வேடம் விலக்கிட வேண்டி
புதுவிதக் கல்வி புகுத்தினை, வேதம்
புதுக்கினை, எங்கும் பொலிவாய்ப் பஜனை
எதிரொலித் தின்றெமக் கின்பம் பெருக்கிக்
குதுகலம் தந்தாய் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-22)

(இன்றைய காலத்தில்) பிறருக்கு இனிமை தராத சொற்களைப் பேசி, இதம் தராத செயல்களைச் செய்து, பக்குவமில்லாதவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதையே இளையோர் சுதந்திரம் என்று தவறாக எண்ணுகின்றனர்.

இந்தத் தவறான கோலத்தை அகற்றும் பொருட்டாக நீ புதுவிதமான (விழுக்கல்வி - Education in Human Values, வித்யாவாஹினி போன்ற) கல்வித் திட்டங்களை ஏற்படுத்தினாய்;

வேதம் ஓதுதலைப் புதுப்பித்து எங்கெங்கும் ஒலிக்கச் செய்தாய்;

பஜனை என்கிற துதிப்பாடல் எங்கெங்கும் எதிரொலிக்கும்படியாக பொலிவுறச் செய்து, எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுத்தி, அதனால் நீயும் மனம் குளிர்ந்தாய்!