Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 15

மானுட உடலெடுத்து வந்த தெய்வம்



திசைதிசை யெங்கும் திகழும்பன் னாட்டார்
நசையுடன் எண்ணிலர் வந்தனர் காணாய்!
விசைமிகச் சுற்றி விரிக்கும்தன் கையின்
அசைவினில் நீறும் அணிமணி பொன்னும்
இசைவித் தெவருக்கும் ஈந்தனன் சாயி!
தசையுட லோடு மனிதர்வாழ் பூமி
மிசைவரு தெய்வதம், வேதமு தல்வன்,
இசையினைப் பாடி இசைத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-15)  

வெவ்வேறு திசைகளில் இருக்கின்ற பற்பல நாடுகளிலும் இருந்து எண்ணற்ற அன்பர்கள் மிகுந்த விருப்பத்துடன் வந்திருப்பதைப் பாராய்!

விரைந்து கையைச் சுழற்றிப் பின்னர் அதனை விரித்து அதிலிருந்து திருநீறும், பொன்னாலான ஆபரணங்களும் தோற்றுவித்து பலருக்கும் சாயி கொடுக்கிறான்.

தசையினாலான (மானுட) உடலைத் தான் (நம்பொருட்டாக) எடுத்துக்கொண்டு, இந்த மனிதர்கள் வாழும் பூமிமீது வந்திருக்கும் தெய்வமும், வேதங்கள் கூறும் முதற்பொருளும் ஆன சாயியின் புகழை இசையோடு பாடலாம் வாரீர்!

No comments:

Post a Comment