Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 17

நெடுங்காலத் துணை நீயே!


ஸ்ரீ சத்திய சாயி உயர்மருத்துவ நிலையம் 

கல்வி, சிகிச்சைகள் கட்டண மின்றியே
நல்கிடு நாயகமே! நல்லரசே! கற்பகமே!
பல்விதத் துன்பமும் பாடாய்ப் படுத்துகையில்
அல்லல் எலாந்தீர்த்தே அன்பினை யேபொழிவாய்
இல்லை யெனாமல் எவர்க்கும் வழங்கிடும்
வல்லோன் உனக்கின்னும் வல்லியர் எங்களின்
தொல்லை யகற்றிடத் தோன்றவு மில்லையோ!
ஒல்லை யொருதுணை நீயேலோ ரெம்பாவாய்!     (பாடல்-17)

(சாயியை நோக்கிப் பாடுவதாக இந்தப் பாசுரம் அமைந்துள்ளது) 

கல்வி, சிகிச்சை போன்றவற்றைக் கட்டணமில்லாமல் வழங்கும் எம் தலைவனே! (மூவுலகுக்கும்) நல்ல அரசனே!

கற்பகம் போன்று வாரி வழங்குபவனே! யாருக்கும் பலவிதமான துன்பங்கள் வந்து மிகவும் கஷ்டப்படுத்தும்போது, அவற்றையெலாம் தீர்த்து உனது அன்பை அவர்மீது பொழிவாய்.

இல்லையென்று கூறாமல் வழங்குகிற வல்லமை உடையவன் நீ.

(அப்படியிருந்தும்) பெண்கொடிகளான எங்களுடைய (கோபியருடையது போன்ற) காதல் என்ற இந்தத் துன்பத்தை நீக்கத் தோன்றவே இல்லையா! நெடுங்காலமாகவே எங்களது ஒரே துணை நீயே அல்லவோ, ஓ சாயி!

No comments:

Post a Comment