Showing posts with label பகவத் கீதை. Show all posts
Showing posts with label பகவத் கீதை. Show all posts

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 20

வாக்கைக் காப்பாற்ற வந்தவன்!


தீது மலிந்திட தர்மம் நலிந்திடும்
போதிலும் மாதவர் துன்புற் றசுரர்கள்
மேதினி யில்பெரும் ஆதிக்கம் ஓச்சிடும்
சோதனைக் காலம் வரும்போ தினிலெலாம்
பூதலத்தில் வந்து பிறப்பெடுப் பேனென
கீதையில் போதித்தோன் கீழிறங்கி வந்தனன்
சாதுக்கள் போற்றிடும் சத்திய சாயியை
காதலில் போற்றிக் கரைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்- 20)

“எப்போதெல்லாம் தீமைகள் பெருகி, அறம் அருகுகிறதோ, தவசியரும் ஞானியரும் துன்புறும்படியாக அசுரர்களின் ஆதிக்கம் ஓங்குகிறதோ, அப்படிப்பட்ட சோதனைக் காலம் வரும்போது நான் பூமியில் அவதரிப்பேன்” என்று கீதையில் கூறிய அவனே (சாயியாக) கீழிறங்கி வந்திருக்கிறான்.

சாதுக்களெல்லாம் போற்றிப் புகழுகின்ற சத்திய சாயியைக் காதலோடு புகழ்ந்து உருகலாம் வாரீர்!