Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Monday, January 13, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 30

சத்திய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை தருபவன்!




சத்தியம் தர்மம் சரதமாய்ச் சாந்தியும்
நித்ய பிரேமை நிரம்பு மகிம்சையும்
இத்தரை மீதினில் எல்லோர்க்கும் தந்திடும்
சத்திய சாயியைச் சந்தத் தமிழாலே
பத்தன் மதுரன் பணிவுடன் பாடிய
தித்திக்கும் பாவையைச் செப்புவா ரெல்லாரும்
முத்தியும் செல்வமும் சித்திக்கப் பெற்றிடுவார்
சுத்தனைப் பாடிச் சுகித்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-30)

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றை பூமியில் வாழும் எல்லோருக்கும் தரவந்தவன் சத்திய சாயி.

அவனைச் சந்தமிகுந்த தமிழாலே பக்தனான மதுரபாரதி மிகப் பணிவோடு பாடிய இனிக்கின்ற இந்தச் ‘சாயி திருப்பாவை’யை ஓதுகின்ற யாவரும், மறுமையில் முக்தியும், இம்மையில் செல்வங்கள் நிரம்பிய வாழ்வும் பெறுவார்கள்.

அப்படிப்பட்ட தூயவனைப் பாடிச் சுகமடைவோம் வாரீர்!

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 20

வாக்கைக் காப்பாற்ற வந்தவன்!


தீது மலிந்திட தர்மம் நலிந்திடும்
போதிலும் மாதவர் துன்புற் றசுரர்கள்
மேதினி யில்பெரும் ஆதிக்கம் ஓச்சிடும்
சோதனைக் காலம் வரும்போ தினிலெலாம்
பூதலத்தில் வந்து பிறப்பெடுப் பேனென
கீதையில் போதித்தோன் கீழிறங்கி வந்தனன்
சாதுக்கள் போற்றிடும் சத்திய சாயியை
காதலில் போற்றிக் கரைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்- 20)

“எப்போதெல்லாம் தீமைகள் பெருகி, அறம் அருகுகிறதோ, தவசியரும் ஞானியரும் துன்புறும்படியாக அசுரர்களின் ஆதிக்கம் ஓங்குகிறதோ, அப்படிப்பட்ட சோதனைக் காலம் வரும்போது நான் பூமியில் அவதரிப்பேன்” என்று கீதையில் கூறிய அவனே (சாயியாக) கீழிறங்கி வந்திருக்கிறான்.

சாதுக்களெல்லாம் போற்றிப் புகழுகின்ற சத்திய சாயியைக் காதலோடு புகழ்ந்து உருகலாம் வாரீர்!