Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 18

ஆபத்பாந்தவனை வணங்குவோம்!



கோபம் விலக்கி குணநலம் கொண்டுய்ந்து
பாபம் விலக்கிப்பின் பக்தர் பணிசெய்து
தீபம் விளக்கித் தினமும் தொழுதேத்தி
நாபிக் கமலத்தில் நான்மு கனைவைத்த
கோபா லனை,புட்டப் பர்த்தி கிராமத்தின்
சாபம் விலக்கிய சத்திய சாயியை
ஆபத்தை நீக்கிடும் ஆனந்த ரூபனை
வா,பணிந் தேத்தி வணங்கேலோ ரெம்பாவாய்! (பாடல்-18)

கோபத்தைத் தவிர்த்து, நல்ல குணங்களைக் கொண்டு மேன்மையடைந்து, பாபச் செயல்களை விலக்கி, இறையன்பருக்குப் பணி செய்து, தீபத்தை நன்கு துலக்கி ஏற்றி, தினந்தோறும் உன்னப் போற்றித் துதிப்போம்.

இவன் தனது கொப்பூழில் வளர்ந்த தாமரையில் பிரம்மனை வைத்த கோபாலன்.

புட்டபர்த்தி பெற்ற சாபத்தை நிவர்த்தி செய்தவன்;

நமக்கு வரும் ஆபத்துகளை அறிந்து விலக்குகின்றவன்; ஆனந்தமே வடிவானவன்.

அப்படிப்பட்டவனை நாம் பணிந்து அன்போடு வணங்கலாம், வாரீர்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 17

நெடுங்காலத் துணை நீயே!


ஸ்ரீ சத்திய சாயி உயர்மருத்துவ நிலையம் 

கல்வி, சிகிச்சைகள் கட்டண மின்றியே
நல்கிடு நாயகமே! நல்லரசே! கற்பகமே!
பல்விதத் துன்பமும் பாடாய்ப் படுத்துகையில்
அல்லல் எலாந்தீர்த்தே அன்பினை யேபொழிவாய்
இல்லை யெனாமல் எவர்க்கும் வழங்கிடும்
வல்லோன் உனக்கின்னும் வல்லியர் எங்களின்
தொல்லை யகற்றிடத் தோன்றவு மில்லையோ!
ஒல்லை யொருதுணை நீயேலோ ரெம்பாவாய்!     (பாடல்-17)

(சாயியை நோக்கிப் பாடுவதாக இந்தப் பாசுரம் அமைந்துள்ளது) 

கல்வி, சிகிச்சை போன்றவற்றைக் கட்டணமில்லாமல் வழங்கும் எம் தலைவனே! (மூவுலகுக்கும்) நல்ல அரசனே!

கற்பகம் போன்று வாரி வழங்குபவனே! யாருக்கும் பலவிதமான துன்பங்கள் வந்து மிகவும் கஷ்டப்படுத்தும்போது, அவற்றையெலாம் தீர்த்து உனது அன்பை அவர்மீது பொழிவாய்.

இல்லையென்று கூறாமல் வழங்குகிற வல்லமை உடையவன் நீ.

(அப்படியிருந்தும்) பெண்கொடிகளான எங்களுடைய (கோபியருடையது போன்ற) காதல் என்ற இந்தத் துன்பத்தை நீக்கத் தோன்றவே இல்லையா! நெடுங்காலமாகவே எங்களது ஒரே துணை நீயே அல்லவோ, ஓ சாயி!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 16

சாயி சொல் கேட்போம்


அன்னாய்! உனதுமகள் ஆதவன் வந்தபின்
இன்னம் உறங்குவ தென்னே! எழுப்புகிலை?
பொன்னகை சோம்பல் புறம்பேசல் பொய்நீக்கி
நன்னடத்தை பூண்டு நலமிலாக் கேளிக்கை
மின்னும் பகட்டு பொறாமை யகற்றியே
தின்னுவ இன்னவென்று தேர்ந்து நுகர்குவோம்
சொன்னமும் அன்னமும் நீரும் வழங்குவோம்
முன்னவன் சாயிசொல் கேட்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-16)

(எவ்வளவு கூறியும் தமது தோழி எழுந்திராததைக் கண்டு அவளுடைய அன்னையிடம் புகார் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது).

அம்மா! சூரியனே வந்துவிட்டான் இன்னும் உன் மகள் உறங்கிக் கொண்டிருப்பது எப்படி? நீதான் அவளை எழுப்பமாட்டாயா?

(இந்தப் பாவை நோன்பை நோற்கும் நாங்கள்) பொன்னாலான நகைகளை அணியமாட்டோம்; புறங்கூறுதலும் பொய் பேசுவதும் விலக்குவோம்;

நல்ல நடத்தை பூண்டு ஒழுகுவோம்;

எந்தப் பொழுதுபோக்கு நலத்தைத் தராதோ அதையும், ஆடம்பரத்தையும், பொறாமையையும் நீக்கிவிடுவோம்;

நாம் உண்ணும் பொருள் நல்லதா அல்லவா என்று ஆராய்ந்து பின்னர் உண்ணுவோம்;

தங்கமும், உணவுப்பொருளும், நீரும் தானமாக வழங்குவோம்.

ஆதிமூலமான சாயியின் அருள்மொழிக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் இவற்றைச் செய்கிறோம்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 15

மானுட உடலெடுத்து வந்த தெய்வம்



திசைதிசை யெங்கும் திகழும்பன் னாட்டார்
நசையுடன் எண்ணிலர் வந்தனர் காணாய்!
விசைமிகச் சுற்றி விரிக்கும்தன் கையின்
அசைவினில் நீறும் அணிமணி பொன்னும்
இசைவித் தெவருக்கும் ஈந்தனன் சாயி!
தசையுட லோடு மனிதர்வாழ் பூமி
மிசைவரு தெய்வதம், வேதமு தல்வன்,
இசையினைப் பாடி இசைத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-15)  

வெவ்வேறு திசைகளில் இருக்கின்ற பற்பல நாடுகளிலும் இருந்து எண்ணற்ற அன்பர்கள் மிகுந்த விருப்பத்துடன் வந்திருப்பதைப் பாராய்!

விரைந்து கையைச் சுழற்றிப் பின்னர் அதனை விரித்து அதிலிருந்து திருநீறும், பொன்னாலான ஆபரணங்களும் தோற்றுவித்து பலருக்கும் சாயி கொடுக்கிறான்.

தசையினாலான (மானுட) உடலைத் தான் (நம்பொருட்டாக) எடுத்துக்கொண்டு, இந்த மனிதர்கள் வாழும் பூமிமீது வந்திருக்கும் தெய்வமும், வேதங்கள் கூறும் முதற்பொருளும் ஆன சாயியின் புகழை இசையோடு பாடலாம் வாரீர்!

Wednesday, January 1, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 14

பிரபஞ்சம் படைத்தவன் பெருமை யாரே அறிவர்!



அண்ட சராசரம் ஆக்கி அதிலிடம்
கொண்டபல் கோள்களும் தாரகைக் கூட்டத்தின்
மண்டலமும் நீண்டிடும் வானியல் பாட்டையில்
எண்ணற் கரியன எண்ணில செய்தனன்
அண்ணல் அழகன் அறிவன் பெருமைகள்
திண்ணமாய் யாவும் தெரிந்தவர் யாருளார்?
விண்ணவர் வேந்தனை வேண்டுவர் காந்தனை
பண்ணிசை பாடிப் பரவேலோ ரெம்பாவாய்!     (பாடல்-14)

அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து, அதிலே சிந்தனைக்கும் எட்டாத கிரகங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் வானப்பாதையிலே கணக்கில்லாமல் படைத்தவனான சாயியின் பெருமைகள் முழுவதையும் யாரே நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறார்!

அழகனும் அறிவின் இருப்பிடமும் தேவர்களின் சக்ரவர்த்தியும், தன்னை விரும்புவோரைக் கவர்ந்திழுப்பவனுமான அண்ணலை, இசைப்பாடல் பாடித் தொழுவோம் வாரீர்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 13

ஆலத்தை உண்டவன் வந்தான்!


ஆலத்தை உண்டே அகிலம் புரந்தனன்
காலனை வென்றான் கருநிற மாரனைக்
கோல விழியின் கொடுந்தழ லால்எரித்தான்
ஞாலம் தழைக்கவும் நாமும் செழிக்கவும்
சாலவும் அன்பொடு சாயி அவதரித்துச்
சீலம் பலப்பல செப்பி யருளினான்
மூலப் பரம்பொருள் முன்னவன் தன்னிரு
காலைப் பணிவோம் கசிந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-13)

ஆலகால விஷத்தை விழுங்கி இந்த உலகத்தைக் காத்தான். எமனை வெற்றி கொண்டான். கருநிறம் கொண்ட மன்மதனைத் தனது அழகிய நெற்றிக் கண்ணின் கொடிய நெருப்பாலே எரித்தான் அந்தச் சிவபெருமான்.

இப்போது அவனே இந்த உலகம் தழைக்கும்படியாகவும், நாமெல்லோரும் செழிப்பு அடையும்படியாகவும் மிகுந்த அன்போடு சாயியாக அவதரித்திருக்கிறான்.

நமக்குப் பல உயரிய ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பரம்பொருள். இதன் ஆதியும் ஆவான். அவனது இரண்டு பாதங்களையும் மனமுருகிப் பணிவோம் வருவீராக.

சிறப்புப் பொருள்:

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வந்தது விஷம். அதன் வெம்மையால் உலகம் அழிந்துபடும் என்ற நிலையில் அதனைத் தானே விழுங்கிய தியாகராஜன் சிவபெருமான்.

அவ்வாறு அன்பர் துன்பத்தையெல்லாம் தானேற்றுக்கொண்டவன் சாயீசன். பக்தி நெறியில் வந்தோர்க்குக் காமனை வெல்லும் ஆற்றல் கொடுத்தவன். அவ்வாறு காமனை வென்று ஞானவழி நின்றோர்க்குக் காலனையும் அணுகவொட்டாது செய்தவன் அவனே என்பது இப்பாடலின் குறிப்பு. 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 12

உய்யும் வழிகாண வாருங்கள்



வயிர நகையாய் வடிவெழில் நங்காய்!
அயராமல் ஆயிரம் காதைகள் சொன்னாய்,
“கயிறா லுரலினில் கட்டுண்டோன் வந்தான்
உயர்பர்த்தி தன்னிலே, உள்ளம் கவர்ந்தான்
உயிரும் அவன்”என் றுரைத்தசொல் போச்சோ!
துயிலும் விலக்கலை! தோழியர் நாம்போய்
புயல்வண்ணன் சாயீசன் பொன்னடி போற்றி
உயல்வழி காண்போம் உயர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-12)

வைரம்போலப் புன்னகைக்கும் அழகிய வடிவையுடைய பெண்ணே! 

“கயிற்றினால் உரலோடு கட்டப்பட்டவன் (கண்ணன்) பூமிக்கு மீண்டும் வந்திருக்கிறான். அவன் உயர்ந்த புட்டபர்த்தியில் அவதரித்திருக்கிறான். என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட அவனே என் உயிரும்கூட” என்றெல்லாம் சளைக்காமல் ஆயிரம் கதைகள் கூறினாயே. அந்தச் சொல்லெல்லாம் போய்விட்டதோ? (அவனுக்காகக்கூட) உறக்கத்தை நீ விலக்கவில்லை. 

தோழியரே வாருங்கள்! நாம் போய், மேக வர்ணம் கொண்ட சாயீசனின் பொன்னடிகளைப் போற்றி, முக்தி அடைவதற்கான வழியைப் பெற்று உயர்வோம் வாருங்கள்!