Thursday, January 10, 2019

சாயீஸ்வரா நீயே துணை!



பல்லவி

சாயீஸ்வரா நீயே துணை!

அனுபல்லவி

தாய் ஆயிரம் பேராயினும்
நேயா நினக் கீடாவரோ!  (சாயீஸ்வரா)

சரணங்கள்

இளமைதனில் கருவம்மிக, வழிமாறினோம் தடுமாறினோம்
அளவில்பெருங் கருணையுடன் ஐயன்வர மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

வாய் பேசினோம் வசை வீசினோம் இறைநாமமே சொலக் கூசினோம்
தேயா மதி திகழும் முகத் தெய்வம் உன்னால் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இன்பம் பெறும் இச்சைகளால் நற்பண்பினை விலைபேசினோம்
இன்பம் எனில் இறைவன் என அறிவூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

உலகம் ஒரு குடும்பம் அதில் உறையும் அனைத் துயிரும் இனி
விலகா உற வெனநெஞ்சிலே உணர்வூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இதயம் ஒரு கோவில் அதில் அன்பென்பதே கடவுள் எனச்
சதமும்பொதுப் பணிசெய்திட விதிசெய்தனை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

நாமங்களும் ரூபங்களும் நாம்செய்தவை, நம்நெஞ்சிலே
காமம்விடக் காட்சிப்படும் கடவுள் என்றாய் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

பர்த்தீஸ்வரா பரமேஸ்வரா அகிலேஸ்வரா ஹ்ருதயேஸ்வரா
முத்தி தரும் பூர்ணேஸ்வரா உன்பாதமே சரணாகதி  (சாயீஸ்வரா)

No comments:

Post a Comment