Thursday, January 17, 2019

ஸ்ரீ சத்திய சாயி தாலாட்டு



நெஞ்சத்துத் தொட்டிலிலே நினைவென்னும் பட்டுதனை
மஞ்சமாய் விரித்து, பக்தி மணம் தெளித்து
அஞ்சுகமே, ஆரமுதே துயில்கொள்ள அழைக்கின்றோம்
பிஞ்சுக் கதிரவனே தாலேலோ!
பெரியவற்றில் பெரியவனே தாலேலோ!

அர்த்த ராத்திரியில் மத்தளமும் தம்பூரும்
சத்தம் எழுப்பிக் கூறினவாம் நின்வரவை
பர்த்தியின் வரமே பாருக்குப் பேரொளியே
உத்தமனே சத்தியமே தாலேலோ!
உன்னதனே மன்னவனே தாலேலோ!

சொர்ணமகள் ஈஸ்வரம்மா கருவில் உதித்தவனே
கர்ணம் சுப்பம்மா கைகளிலே வளர்ந்தவனே
வர்ணக் களஞ்சியமே வானவில்லே மாயவனே
தர்மத்தின் நாயகனே தாலேலோ!
தாய்க்கெல்லாம் தாயானாய் தாலேலோ!

அரங்கமா நகரிலே அறிதுயில் கொண்டதனால்
இரவிலும் பகலிலும் உழைத்தாயோ பர்த்தியிலே
புரந்தரா நிரந்தரா பொதுநடம் புரிந்தவா
வரம்பிலாக் கருணையாய் தாலேலோ
வள்ளலே கண்வளர்வாய் தாலேலோ

அன்பென்னும் வில்லிலே அன்புச் சரம்பூட்டி
அன்பெய்தாய் அவனிதனை அன்பாலே ஆட்கொண்டாய்
அன்பின் சுரங்கமே அன்பென்னும் பெருங்கடலே
அன்பருக் கன்பனே தாலேலோ!
அன்பு வடிவானவா தாலேலோ!

No comments:

Post a Comment