Thursday, June 27, 2013

“நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்?”

1946ல், அதாவது சுவாமிக்கு 20 வயதாக இருந்தபோதே அவரைத் தரிசிக்கவும், பலமுறை சுவாமியின் கருணையை நேரடியாக அனுபவிக்கவும், உபதேச மொழிகளைக் கேட்கவும் எனப் பலவகை பாக்கியங்களை அனுபவித்தவர் கருணாம்பா ராமமூர்த்தி என்ற கண்ணம்மா அவர்கள். தெய்வீக அனுபவக் களஞ்சியமான அவரது Sri Sathya Sai Anandadayi - Journey with Sai என்ற அற்புத நூலிலிருந்து ஓர் அழகிய சம்பவம்:

பாதமந்திரத்தில் ஒரு கண் மருத்துவ முகாம். அது முடிந்ததுமே எல்லாக் கருவிகளையும் மூடிக் கட்டி வைத்தார்கள். அப்போது அங்கே ஒரு கிழவனார் வந்து, “தயவுசெய்து என் கண்ணைச் சோதித்துப் பார்த்து மருந்து கொடுங்க” என்று கெஞ்சினார்.

“கருவிகளெல்லாம் பேக் பண்ணி வச்சுட்டோம்; இப்ப ஒண்ணும் பண்ண முடியாது” என்று இரண்டு டாக்டர்கள் கூறினார்கள். முதியவர் மூன்றாவது மருத்துவரிடம் போய் வேண்டினார். அவர் மனமிரங்கி, கண்களைப் பரிசோதித்துவிட்டு மருந்து கொடுத்தார். அத்தோடு நிற்காமல், “சாயிராம், சாயிராம் என்று சொல்லிக்கொண்டே இருங்கள் பெரியவரே” என்றும் கூறினார்.

மறுநாள் காலையில் டாக்டர்களும், உதவியாளர்களும் சுவாமிக்குப் பாத நமஸ்காரம் செய்வதற்காகப் பிரசாந்தி நிலையத்தின் முன்னால் உட்கார்ந்திருந்தனர்.

சுவாமி நேராக டாக்டர்களிடம் சென்றார். “நேற்றைக்கு ஒரு முதியவர் சிகிச்சைக்கு வந்தாரே, அவரிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார். “எல்லா மருத்துவக் கருவிகளையும் கட்டி வைத்துவிட்டோம், பரிசோதிக்க முடியாதென்று சொன்னோம்” என்றார்கள் முதல் இரண்டு டாக்டர்களும்.

“சுவாமி, அவருடைய கண்களைச் சோதித்து மருந்து கொடுத்தேன்” என்றார் மூன்றாமவர்.

“அதுமட்டுமல்ல, அவரை ‘சாயிராம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்படியும் கூறினாய், அல்லவா?” என்று கூறிய சுவாமி அவருக்குப் பாத நமஸ்காரம் கொடுத்ததுடன் விபூதி சிருஷ்டித்து அவரது நெற்றியில் தமது திருக்கரத்தால் பூசினார். ஒரு மோதிரம் சிருஷ்டித்து அவருடைய விரலில் அணிவித்தார்.

”நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்? அது நானேதான்!” என்றார் அந்த டாக்டர்களிடம் பகவான்.

No comments:

Post a Comment