Friday, June 28, 2019

அச்சமறு பதிகம் - 6


திசைக்கஞ்சேன் தீநரக யமபடர்தம்
கசைக்கஞ்சேன் கண்கவரும் வடிவேய்ந்த
தசைக்கஞ்சேன் தனிக்கருணைச் சாயீசன்
இசைக்கஞ்ச மலரடியில் இசைந்ததாலே!

பொருள்

(இணைகூற முடியாத) தனிப்பெருங் கருணையைப் பொழிகிற ஸ்ரீ சத்திய சாயியின் புகழ்பொருந்திய தாமரை மலர்போன்ற பாதங்களிற் சரணடைந்துவிட்ட காரணத்தினால், (இனி நான்) திசைகளுக்கு அஞ்சமாட்டேன்; தீ கொழுந்துவிட்டு எரிவதாகச் சொல்லப்படும் நரகத்தில், எமபடர்கள் கையில் வைத்திருக்கின்ற சவுக்குக்கு அஞ்சமாட்டேன்; அழகழகான வடிவங்களில் அமைந்த உடல்களின் ஈர்ப்புக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப் பொருள்

திசைக்கு அஞ்சேன் - வெவ்வேறு திசைகளில் தலைவைத்துப் படுத்தல், திசை நோக்கி உண்ணுதல், சில நாட்களில் சில திசை நோக்கிப் பயணித்தல் என இவ்வாறு பலவற்றுக்கும் தடை உண்டு. ஆனால் எல்லாத் திசைகளிலும் எம் சாயியே நிறைந்திருப்பதைக் காணுவதால் எமக்குத் திசைகளால் ஏற்படும் அச்சமில்லை.

கசைக்கஞ்சேன் - சாயியிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட எமக்கு இனிப் பாவமும் புண்ணியமும் இல்லாத காரணத்தால் நரக பயமும் கிடையாது.

வடிவேய்ந்த தசை - பால் கவர்ச்சி என்பது அழகாக வடிவமைந்த உடல்களின் கவர்ச்சியே ஆகும். சாயியின்பால் ஈர்க்கப்பட்டுவிட்ட எம் மனம் இனி இனக்கவர்ச்சிக்கு ஆளாகாது.

இசைக்கஞ்ச மலர் - புகழ்பொருந்திய தாமரை மலர்

No comments:

Post a Comment